×
 

இத செஞ்சு முடிச்சே ஆகணும்! ஆட்சியே அத நம்பிதான் இருக்கு!! தவெகவினருக்கு முதல்வர் விஜய் முக்கிய உத்தரவு!

ஐந்து தொகுதிகளுக்கான இடைத் தேர்தலுக்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தாலும், இடைத்தேர்தல் குறித்த பணிகளில் கவனம் செலுத்துங்கள் என்று மாவட்ட பொறுப்பு அமைச்சர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார் முதல்வர் விஜய்.

ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தாலும், இடைத்தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் தொடர்ந்து கவனம் செலுத்துமாறு மாவட்ட பொறுப்பு அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஆறு முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதனுடன், முதலமைச்சர் விஜய் தனது திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து மொத்தம் ஏழு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், நெல்லையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூர், பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதியை அறிவிக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு இடைக்காலத் தடை விதித்தது. தேர்தல் மனுக்கள் நிலுவையில் இருக்கும் நிலையில் அவசரமாக தேர்தலை நடத்தக் கூடாது என்பதே மனுதாரரின் முக்கிய வாதமாக இருந்தது.

இதையும் படிங்க: முதல்வர் விஜய் இன்று சொந்த தொகுதிக்கு விஜயம்!!! பெரம்பூருக்கு அதிரடி விசிட்!! மக்களிடம் நேரில் மனு பெறுகிறார்!

இந்த சட்டத் தடை இருந்தபோதிலும், தேர்தல் எப்போது அறிவிக்கப்பட்டாலும் தயாராக இருக்க வேண்டும் என்ற நோக்கில், சம்பந்தப்பட்ட மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் தேர்தல் தொடர்பான அடிப்படை ஏற்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், ஏழு தொகுதிகளிலும் வெற்றி பெறும் இலக்குடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டதாகக் கூறப்படும் உளவுத்துறை அறிக்கையில், இடைத்தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளின் அணுகுமுறைகள் குறித்து குறிப்பிட்டிருந்ததாகவும், அதனைத் தொடர்ந்து இந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை.

மறுபுறம், தேர்தல் நடைபெறுமா என்பதே இன்னும் உறுதியாக தெரியாத நிலையில், தற்போதே தேர்தல் பணிகளில் முழுமையாக ஈடுபடுவது குறித்து சில மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் குழப்பம் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இடைத்தேர்தல் தொடர்பான நீதிமன்ற வழக்குகள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகளே, தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பான திருப்பத்தை தீர்மானிக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இதையும் படிங்க: 5 நிமிடத்தில் கொத்து பரோட்டா ஆக்கிட்டேன்! முதல்வர் விஜயை மீண்டும் விமர்சித்த அனிதா ராதாகிருஷ்ணன்! புதிய சர்ச்சை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share