கனிமொழி கையில் இனி திமுக மாணவரணி! அதிகாரம் போனதால் கோவத்தில் உதயநிதி! அதிகரிக்கும் உரசல்!
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கட்டுப்பாட்டில் இருந்த தி.மு.க., மாணவரணி, தற்போது கட்சியின் துணை பொதுச்செயலர் கனிமொழியின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
தி.மு.க.வில் முக்கிய அமைப்பாக கருதப்படும் மாணவரணி தொடர்பாக புதிய அரசியல் விவாதம் உருவாகியுள்ளது. இதுவரை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் செல்வாக்கில் செயல்பட்டு வந்ததாக கூறப்படும் மாணவரணி, தற்போது கட்சியின் துணைப் பொதுச்செயலர் கனிமொழியின் அரசியல் செல்வாக்குக்குள் சென்றுள்ளதாக கட்சி வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
தி.மு.க.வில் செயல்பட்டு வரும் 25-க்கும் மேற்பட்ட சார்பு அமைப்புகளில், இளைஞரணி மற்றும் மகளிரணிக்கு அடுத்தபடியாக மாணவரணி முக்கிய பங்கு வகிப்பதாக கருதப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக மாணவரணி நடவடிக்கைகள் உதயநிதி ஸ்டாலின் அரசியல் அணுகுமுறையுடன் இணைந்து செயல்பட்டதாக கூறப்படுகிறது. மாணவரணி முன்னாள் நிர்வாகிகள் மற்றும் பல முக்கிய பொறுப்பாளர்கள் உதயநிதியின் ஆதரவாளர்களாக கருதப்பட்டனர்.
இந்நிலையில், மகளிரணி நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தி வந்த கனிமொழி, தனது ஆதரவாளர்களை பல்வேறு அமைப்புகளில் முன்னிலைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கட்சி வட்டாரங்களில் கருத்துகள் நிலவுகின்றன. அதன் தொடர்ச்சியாக மாணவரணி நிர்வாக அமைப்பிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: திமுகவை பலப்படுத்த போராடும் உதயநிதி ஸ்டாலின்! முட்டுக்கட்டை போட்டு குடைச்சல் கொடுக்கும் சீனியர்கள்!
இதற்கிடையில், 'நீட்' தேர்வு மற்றும் ஹிந்தி திணிப்புக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டையில் மாணவரணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த நிகழ்ச்சியில் கனிமொழியின் புகைப்படங்கள் அதிக முக்கியத்துவத்துடன் இடம்பெற்றதாகவும், மாணவரணி மேடையில் முதன்முறையாக அவரது அரசியல் இருப்பு வெளிப்படையாக பிரதிபலித்ததாகவும் கட்சி நிர்வாகிகள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், தேர்தலுக்குப் பிறகு நடைபெற்ற முக்கிய மாணவரணி நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கவில்லை என்பது கட்சி வட்டாரங்களில் கூடுதல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் சமீபத்தில் நடைபெற்ற சில மகளிரணி நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்காதது குறித்து பல்வேறு விளக்கங்கள் கூறப்பட்டு வருகின்றன.
இந்த சூழலில், மாணவரணி நிர்வாக கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தி.மு.க.வின் உள்கட்சி அதிகார சமநிலையை பிரதிபலிக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனினும், இந்த விவகாரம் தொடர்பாக கட்சி தலைமையோ, உதயநிதி ஸ்டாலின் அல்லது கனிமொழி தரப்போ அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தையும் வெளியிடவில்லை. இருப்பினும், மாணவரணி தொடர்பான இந்த மாற்றங்கள் தி.மு.க. அரசியலில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளன.
இதையும் படிங்க: திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில் லஞ்சம்?! ரூ.3 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை! பகீர் குற்றச்சாட்டு!