×
 

ரூ.8,000 இல்லத்தரசி கூப்பன் எதுக்கு? வேஸ்ட்டு?! திமுக நிர்வாகிகள் கவலை!

8,000 ரூபாய் கூப்பனை பற்றி பேசினால், ஒரு மாத மளிகை சாமானுக்கு கூட பத்தாது என்றும் கிண்டலடிக்கின்றனர்.

காரைக்குடியில் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி சார்பில் பிரசாரம் செய்யச் சென்ற தி.மு.க. நிர்வாகிகள், மக்களிடம் பெரும் சங்கடத்தை சந்தித்துள்ளனர். தி.மு.க. அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டு ஓட்டு கேட்டபோது, மக்கள் நக்கலாக பதில் அளித்து நிர்வாகிகளை திணறடித்தனர்.

பிரசாரக் கூட்டங்களில் தி.மு.க. நிர்வாகிகள் பெண்களின் வங்கிக் கணக்கில் வழங்கப்படும் 5,000 ரூபாய் உதவியை முக்கியமாகக் குறிப்பிட்டனர். ஒரு பக்கத்தைப் பார்த்து, “உங்களுக்கு எல்லோருக்கும் 5,000 ரூபாய் வந்துவிட்டதா?” என்று கேட்டனர். 

பல பெண்கள் “இன்னும் வரவில்லை” என்று பதிலளித்தனர். உடனே நிர்வாகிகள் மற்றொரு பக்கத்துக்கு திரும்பி, “உங்களுக்கு வந்துவிட்டதா?” என்று கேட்டனர். சிலர் “வந்துவிட்டது” என்றதும், “எதற்காக ஒரே நேரத்தில் பணம் போட்டார் என்று தெரியுமா?” என்று அடுத்த கேள்வியை எழுப்பினர்.

இதையும் படிங்க: வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர்!! ஒரு கிலோ தங்கம் தருவேன்!! வாக்குறுதிகளில் விளையாட்டு காட்டும் சீமான்!!

அப்போது மக்கள் நக்கலாக, “ஓட்டு போடுவதற்குத் தானே! வேறு எதற்கு?” என்று பதில் அளித்தனர். இதைக் கேட்ட நிர்வாகிகள் திணறி, உடனே அடுத்த சாதனைக்கு தாவினர். 8,000 ரூபாய் மளிகை கூப்பன் பற்றி பேசியபோது மக்கள், “ஒரு மாதத்துக்கு மளிகை சாமான்களுக்கு கூட பத்தாது” என்று கிண்டல் செய்தனர். இந்த பதில்கள் பிரசாரக் கூட்டத்தை சிரிப்பலையில் மூழ்கடித்தன.

தி.மு.க. அரசின் மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ஓட்டு கேட்க வந்த நிர்வாகிகள், மக்களின் நேரடி கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்க முடியாமல் தடுமாறினர். பண உதவி திட்டத்தை “வாக்குக்கு பணம்” என்று மக்கள் நேரடியாக சுட்டிக்காட்டியது, பிரசார அணியினருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்குடி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியுடன் இணைந்து தி.மு.க. நிர்வாகிகள் தீவிர பிரசாரம் செய்து வரும் நிலையில், இந்த சம்பவம் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் நக்கல் பதில்கள் மற்றும் கிண்டல்கள், தி.மு.க.வின் திட்டங்கள் மக்களிடம் எந்த அளவுக்கு சென்றடைந்துள்ளன என்பதை எடுத்துக்காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

தேர்தல் நாள் நெருங்கும் வேளையில், காரைக்குடியில் நடைபெற்ற இந்த பிரசார சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. மக்களின் உண்மையான குரல் எப்படி இருக்கிறது என்பதை இந்த நிகழ்வு தெளிவாகக் காட்டுகிறது.

இதையும் படிங்க: கருணாநிதி செஞ்ச அதே தப்பை மு.க.ஸ்டாலினும் செய்கிறார்!! அண்ணாமலை குற்றச்சாட்டு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share