×
 

மோசமாக நடந்துகொண்டனர்! திருமாவளவனை தொடர்ந்து துரை வைகோ! திமுகவை குறிவைத்து அடுத்த அதிரடி பேச்சு!

திமுக குறித்து திருமாவளவன் சமீபத்தில் தெரிவித்த விமர்சனங்கள் “100 சதவீதம் உண்மை” என்றும் அவர் கூறியது அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

சென்னை: தமிழக அரசியலில் திமுக கூட்டணி தொடர்பான சர்ச்சை மீண்டும் சூடுபிடித்துள்ள நிலையில், மதிமுக முதன்மை செயலரும் எம்.பி.யுமான துரை வைகோ, திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனைத் தொடர்ந்து துரை வைகோவும் திமுக கூட்டணி அணுகுமுறையை வெளிப்படையாக விமர்சித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மற்றும் புதுக்கோட்டையில் பேசிய துரை வைகோ, கடந்த சட்டசபை தேர்தலில் கூட்டணி கட்சிகளிடம் தொகுதி பங்கீட்டின்போது திமுக தலைமை கடுமையாக நடந்து கொண்டதாக குற்றம்சாட்டினார். குறிப்பாக மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும், சட்டரீதியான பிரச்னைகள் குறித்து சுட்டிக்காட்டிய பின்னரும் கடைசி நேரத்தில் சின்னம் தொடர்பாக சிக்கல் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், காங்கிரஸ் கட்சிக்கான தொகுதி ஒதுக்கீடு மற்றும் வேட்பாளர் தேர்விலும் திமுகவின் தலையீடு இருந்ததாக துரை வைகோ குற்றம்சாட்டினார். திமுக குறித்து திருமாவளவன் சமீபத்தில் தெரிவித்த விமர்சனங்கள் “100 சதவீதம் உண்மை” என்றும் அவர் கூறியது அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: முதல்வர் விஜய்யை எதிர்த்து போராட்டம்! மா.சுப்பிரமணியன், ஆ.ராசா உள்ளிட்ட திமுகவினர் மீது போலீஸ் வழக்கு!

விசிக தலைவர் திருமாவளவன், சட்டசபை தேர்தலுக்குப் பிறகு கூட்டணியில் இருந்து கட்சிகள் விலகியதற்கு திமுகவின் அணுகுமுறையே காரணம் என விமர்சித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக துரை வைகோவும் திமுகவை விமர்சித்திருப்பது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

இதற்கிடையே, மிசா காலத்தில் ஸ்டாலின் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்தும் துரை வைகோ கருத்து தெரிவித்துள்ளார். அரசியல் காரணங்களுக்காக மட்டுமே அவர் கைது செய்யப்பட்டார் என்று கூறுவது முழுமையான உண்மை அல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருச்சியை இரண்டாவது தலைநகராக மாற்றுவது குறித்தும் துரை வைகோ ஆதரவு தெரிவித்துள்ளார். அவ்வாறு அறிவிக்கப்பட்டால் மத்திய மாவட்டங்களுக்கு வளர்ச்சி கிடைக்கும் என்றும் அவர் கூறினார். பட்டினப்பாக்கம் மற்றும் பரந்தூர் திட்டங்கள் தொடர்பாகவும் முதல்வர் விஜய் உரிய முடிவெடுப்பார் என நம்பிக்கை தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் பேட்டியளிக்கும் முன், அங்கு இருந்த திமுக கவுன்சிலர் ஒருவரை வெளியே செல்லுமாறு துரை வைகோ கேட்டுக்கொண்டதும் கவனம் பெற்றுள்ளது. “நாம் எப்போதும் நட்புடன் இருப்போம்” என்று கூறிய பின்னர், திமுக குறித்து அவர் தனது விமர்சனங்களை முன்வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமாவளவனைத் தொடர்ந்து துரை வைகோவின் இந்த பேச்சு, தமிழக கூட்டணி அரசியலில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.

இதையும் படிங்க: திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்!” விஜய் விவகாரத்தில் ஆ.ராசா திடீர் விளக்கம்... வார்த்தைகளை திரும்பப் பெற தயார்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share