×
 

அதிமுக எம்.எல்.ஏ-க்களுடன் இபிஎஸ் ஆலோசனை.. தவெக ஆட்சி அமைப்பதை தடுக்க வியூகம்!

தவெக ஆட்சி அமைப்பதைத் தடுக்கத் தனது கட்சி எம்.எல்.ஏ-க்களை அதிமுக தலைமை புதுச்சேரி ரிசார்ட்டில் தங்கவைத்துள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் இழுபறி தற்போது புதுச்சேரிக்கு நகர்ந்துள்ளது. அதிமுக எம்.எல்.ஏ-க்கள் புதுச்சேரி ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களைச் சந்திக்கப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை நேரில் சென்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தவெக ஆட்சி அமைக்க இன்னும் 5 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், அதிமுக-வில் உள்ள சுமார் 30 எம்.எல்.ஏ-க்கள் விஜய்க்கு ஆதரவு அளிக்கத் தயாராக இருப்பதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

அதிமுக-வில் இருந்து எம்.எல்.ஏ-க்கள் தவெக பக்கம் சாய்வதைத் தடுக்க, சி.வி. சண்முகம் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் ஏற்கனவே புதுச்சேரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இன்று மாலை புதுச்சேரிக்குச் சென்ற எடப்பாடி பழனிசாமி, அங்குள்ள தனியார் விடுதியில் முகாமிட்டுள்ள எம்.எல்.ஏ-க்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். கட்சியின் ஒற்றுமையைக் காக்கவும், தவெக ஆட்சி அமைப்பதைத் தடுத்து நிறுத்தவும் இந்தச் சந்திப்பு நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: #TNElectionResults2026: 27 தொகுதிகளிலும் பின்னடைவு! தமிழகத்தில் பாஜக-விற்கு பெரும் ஏமாற்றம்!

புதுச்சேரி அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது வெளியிட்ட தகவல் தமிழக அரசியலில் புதிய புயலைக் கிளப்பியுள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அடைந்த தோல்வி குறித்து எடப்பாடி பழனிசாமி வருத்தம் தெரிவித்ததாக அன்பழகன் கூறியுள்ளார்.

தவெக-வைத் தடுத்து நிறுத்த திமுக மற்றும் அதிமுக இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சிப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், அன்பழகனின் இந்தப் பேச்சு அதற்கு வலு சேர்ப்பது போல் அமைந்துள்ளது. இருப்பினும், "மக்களின் தீர்ப்பிற்கு எதிராகச் செல்ல மாட்டோம்" என திமுக தரப்பில் ஏற்கனவே விளக்கமளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஒருபுறம் அதிமுக-வில் பிளவு ஏற்படுவதைத் தடுக்க ரிசார்ட் அரசியல் நடந்து வரும் நிலையில், தவெக தலைவர் விஜய் காங்கிரஸ், விசிக மற்றும் இடதுசாரிகளின் ஆதரவைப் பெற்று 118 என்ற இலக்கை எட்டத் தீவிரமாகப் போராடி வருகிறார். ஆளுநர் மாளிகையில் இருந்து முறையான அழைப்பு வராத நிலையில், புதுச்சேரியில் எடப்பாடி பழனிசாமி நடத்தி வரும் இந்த ரகசிய ஆலோசனை, விஜய்யின் முதல்வர் கனவிற்கு முட்டுக்கட்டையாக அமையுமா அல்லது அதிமுக-வில் ஒரு பெரும் பிளவை ஏற்படுத்துமா என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்.

 

இதையும் படிங்க: நாளை நல்ல தீர்ப்பு வரும்! எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமையும்... ஆர்.பி.உதயக்குமார்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share