அதிமுக யாருக்கு...? - திடீர் மனமாற்றத்தில் சீனியர் தலைகள்... முக்கிய அஸ்திரத்தை கையில் எடுத்த எடப்பாடி...!
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கடுமையாக பேசியவர்கள் சிலர் தற்போது அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.
சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி, தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவு அளித்த அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்களில் சிலர் தற்போது பின்வாங்கும் முடிவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவு அளித்தாலும், எடப்பாடி பழனிசாமியின் பின்னால்தான் நிற்போம் என முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி தெரிவித்துள்ள நிலையில், “இப்போதும் இபிஎஸ் அழைத்தால் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்” என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பதும் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
அவ்வப்போது வீசும் அரசியல் காற்றால் அசைந்துகொண்டிருந்த அதிமுகவை, விஜய் என்ற புதிய அரசியல் சக்தி வேரோடு குலுக்கி பார்க்கும் நிலை உருவாகியுள்ளது. தவெக தலைவர் மற்றும் முதலமைச்சரான விஜயை மையமாகக் கொண்டு அதிமுகவில் பெரிய அரசியல் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை இல்லாத சூழல் நிலவியது. இதையடுத்து நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிமுகவைச் சேர்ந்த 25 எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவுக்கு மாறாக விஜய்க்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதன் மூலம் கட்சிக்குள் பெரிய பிளவு ஏற்பட்டதோடு, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சி.வி. சண்முகம் தரப்பு கருத்து தெரிவிக்க, அதற்கு எதிராக எடப்பாடி தரப்பும் பதிலடி கொடுத்து வந்தது. இரு தரப்பினரும் தங்களை அதிகாரப்பூர்வ அணியாக அங்கீகரிக்க வேண்டும் என சபாநாயகரிடம் தனித்தனியாக கடிதம் அளித்திருந்தனர்.
இந்நிலையில், சென்னையில் திடீரென மாறும் வானிலை போல, அதிமுக அதிருப்தி அணியிலும் மாற்றங்கள் தென்படத் தொடங்கியுள்ளன. இதுவரை எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கடுமையாக பேசியவர்கள் சிலர் தற்போது அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.
இதையும் படிங்க: நடுரோட்டில் உடைந்த அதிமுக... கட்சி அலுவலகம் சுற்றிவளைப்பு... பசுபதி Vs சி.வி.சண்முகம் டீம் இடையே மோதல்..!
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி, முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவு அளித்ததற்கான காரணங்களை விளக்கினார். திமுக ஆதரவுடன் ஆட்சி அமைப்பதைவிட விஜய்க்கு ஆதரவு அளிப்பதே சிறந்தது என எடப்பாடி பழனிசாமி கூறியதாக அவர் குறிப்பிட்டார். மேலும், “நாங்கள் உயிருடன் இருக்கும் வரை அதிமுகவில்தான் இருப்போம். எடப்பாடி பழனிசாமிதான் எங்கள் பொதுச்செயலாளர். அவர் பின்னால்தான் நாங்கள் நிற்போம்” என அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். இதனால் இதுவரை எஸ்.பி. வேலுமணி அணியில் இருந்த கே.சி. வீரமணி, தற்போது மீண்டும் எடப்பாடி அணிக்குத் திரும்பியுள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கிடையில், அதிருப்தி அணிக்கு தலைமை தாங்கிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் சமூக வலைதளப் பதிவும் அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது. “இப்போதும் இபிஎஸ் அழைத்தால் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரச்சார உழைப்பை யாரும் மறுக்க முடியாது” என அவர் பதிவிட்டுள்ளார். அதேபோல், “எப்போதும் ‘போங்கள், போங்கள்’ என்று கூறாமல், ஒருமுறை ‘வாங்க, வாங்க’ என்று அழைத்துப் பாருங்கள்” எனவும் எடப்பாடி பழனிசாமியிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, நேற்று வரை எஸ்.பி. வேலுமணி அணியில் இருந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், பதவி பறிப்பு நடவடிக்கைக்கு பிறகு, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்துக்கு சென்றதாக கூறப்படுகிறது. சமரச பேச்சுவார்த்தைக்காகவே அவர் இந்த சந்திப்பை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக குரல் கொடுத்த அதிருப்தி எம்எல்ஏக்கள் குழு தற்போது பின்வாங்கியுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியானதிலிருந்து, சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள சி.வி. சண்முகத்தின் அலுவலகம் தொடர்ந்து ஆலோசனைகளால் பரபரப்பாக காணப்பட்டது. ஆனால் தற்போது அந்த அலுவலகம் வெறிச்சோடியுள்ளதாக கூறப்படுகிறது. தனது உத்தரவுகளை மீறி செயல்பட்ட எம்எல்ஏக்களின் கட்சிப் பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்ததுடன், அந்த இடங்களில் புதிய நிர்வாகிகளையும் நியமித்துள்ளார். இந்த நடவடிக்கைகளே அதிருப்தி அணியை பின்வாங்கச் செய்ததா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இருப்பினும், அதிமுகவில் ஏற்பட்டுள்ள இந்த பிளவு நீண்ட தூரம் சென்றுவிட்ட நிலையில், மீண்டும் பழைய நிலை திரும்புமா? எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அணியும் சமரசமாகி, கட்சியில் மீண்டும் ஒற்றுமை உருவாகுமா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: தொடர்ந்து ஒதுக்கப்படும் EPS..! நமது அம்மா நாளிதழிலிருந்து எடப்பாடியின் பெயர் நீக்கம்..! தொண்டர்கள் அதிர்ச்சி..!!