நேரில் இணக்கம்... வெளியே விமர்சனம்? தவெக அமைச்சர்கள் மீது கவர்னர் அர்லேக்கர் அதிருப்தி!
நேரில் சந்திக்கும்போது இணக்கமாக இருப்பதாக சொல்லும் த.வெ.க., அரசின் அமைச்சர்கள், பொதுவெளியில் விமர்சிப்பது குறித்து கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் அதிருப்தி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசுக்கும் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கருக்கும் இடையே தற்போது இணக்கமான சூழல் நிலவி வரும் நிலையில், சில அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களின் விமர்சனங்கள் குறித்து கவர்னர் அதிருப்தி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆட்சிக் காலத்தில் தமிழக அரசுக்கும் அப்போதைய கவர்னர் ஆர்.என். ரவிக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து மோதல்கள் ஏற்பட்டன. ஆனால், முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு, தற்போதைய கவர்னர் அர்லேக்கருடன் சுமுகமான உறவை தொடர விரும்புவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், வந்தே மாதரம் விவகாரம், கவர்னர் ஆய்வுக் கூட்டம் உள்ளிட்ட சில பிரச்சினைகளில் தமிழக அரசின் சட்டத் துறை அமைச்சர் நிர்மல்குமார் உள்ளிட்ட சிலர் கவர்னரை விமர்சித்து பேசியதாக கூறப்படுகிறது. மேலும், தவெக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த சில தலைவர்களும் கவர்னரின் செயல்பாடுகளை விமர்சித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஊழலுக்கு எதிராக சாட்டையை சுழற்றிய முதல்வர் விஜய்! ஒரே உத்தரவால் 50 டெண்டர்கள் ரத்து!
இதையடுத்து, முதல்வர் விஜய்க்கு நெருக்கமானவர்கள் அவ்வப்போது கவர்னரை சந்தித்து, மத்திய அரசுடனும் கவர்னர் அலுவலகத்துடனும் இணக்கமான முறையில் செயல்பட தமிழக அரசு விரும்புவதாக தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த சந்திப்புகளின்போது, "நேரில் சந்திக்கும்போது சுமுகமான உறவு வேண்டும் என தெரிவிக்கிறீர்கள். ஆனால், சில அமைச்சர்கள் பொதுவெளியில் என்னை விமர்சிக்கின்றனர். கவர்னர் பதவியை குறிவைத்து கூட்டணி கட்சி தலைவர்கள் சிலர் எல்லை மீறி கருத்து தெரிவிப்பதை அரசு கண்டுகொள்ளவில்லை" என கவர்னர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசுக்கும் கவர்னருக்கும் இடையே தொடர்ந்து ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் சுமுகமான முடிவு எட்டப்படும் வரை, தொடர்புடைய விஷயங்களை பொதுவெளியில் விவாதித்து அரசியல் சர்ச்சையாக மாற்ற வேண்டாம் என கவர்னர் தரப்பில் அறிவுறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசுக்கும் கவர்னர் மாளிகைக்கும் இடையேயான உறவு தொடர்ந்து கவனிக்கப்படும் நிலையில், அமைச்சர்களின் கருத்துகள் மற்றும் அரசின் அணுகுமுறை குறித்து அரசியல் வட்டாரங்களில் விவாதம் எழுந்துள்ளது. இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு அல்லது கவர்னர் மாளிகை தரப்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 2,000 ஏசி மின்பேருந்துகள்.. வருமானம் பெற புதிய ஐடியா! கட்டணம் விஷயத்தில் முதல்வர் விஜயின் கறார் முடிவு?