ஊழலுக்கு எதிராக சாட்டையை சுழற்றிய முதல்வர் விஜய்! ஒரே உத்தரவால் 50 டெண்டர்கள் ரத்து!
நகராட்சி நிர்வாகத்துறையை தன்வசம் வைத்திருக்கும் முதல்வர் விஜய்யின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து போக்குவரத்து துறையின் பல்வேறு டெண்டர்களும் சமீபத்தில் ரத்து செய்யப்பட்டது.
தமிழகத்தில் நகராட்சி நிர்வாகத் துறையின் கீழ் வெளியிடப்பட்ட 50 குறுகிய கால டெண்டர்களை ரத்து செய்ய முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெண்டர் நடைமுறைகளில் விதிமீறல்கள் நடந்ததாக எழுந்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நகராட்சி நிர்வாகத் துறையிலும், ஒப்பந்ததாரர்கள் மத்தியிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தகவல்களின்படி, முதல்வர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, முந்தைய ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட டெண்டர்கள் மற்றும் ஒப்பந்தங்கள் துறைவாரியாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே சென்னை மாநகராட்சியில் முறைகேடு புகார்கள் எழுந்த சில டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து போக்குவரத்துத் துறையிலும் சில டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், நகராட்சி நிர்வாகத் துறையின் கீழ் வெளியிடப்பட்ட சில ஒப்பந்தங்களில், ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பிக்க வழக்கத்தை விட மிகவும் குறுகிய கால அவகாசம் வழங்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. சில டெண்டர்களுக்கு வெறும் ஒரு நாள் முதல் நான்கு நாட்கள் வரை மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டதாகவும், இதனால் போட்டித்தன்மை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன.
இதையும் படிங்க: நீட் தேர்வில் தோல்வியா? மனம் உடையாதீர்கள்... உங்களுக்காக அண்ணன் விஜயின் அரசு உள்ளது - அமைச்சர் அருண்ராஜ்!
இதையடுத்து, குறுகிய கால டெண்டர்கள் எந்த அடிப்படையில் வெளியிடப்பட்டன என்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அரசு விளக்கம் கேட்டதாக கூறப்படுகிறது. அந்த ஆய்வின் தொடர்ச்சியாக, மாநிலம் முழுவதும் வெளியிடப்பட்ட 50 டெண்டர்களை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நடவடிக்கையில் அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சியில் வெளியிடப்பட்ட 30 டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கோத்தகிரி, செங்கம், பெரம்பலூர், திருவள்ளூர், மணப்பாறை மற்றும் திருவையாறு உள்ளிட்ட நகராட்சிகளில் வெளியிடப்பட்ட 20 டெண்டர்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இவற்றில் கழிவுநீர் வடிகால் பராமரிப்பு, குடிநீர் இணைப்பு பணிகள், வாரச் சந்தை கடைகள் பராமரிப்பு, புதிய போர்வெல் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்பான ஒப்பந்தங்கள் இடம்பெற்றிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நகராட்சி நிர்வாகத் துறை தரப்பில், உரிய விதிமுறைகள் முழுமையாக பின்பற்றப்படாத காரணத்தினாலேயே இந்த டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த நடவடிக்கைகள் தொடர்பாக அரசின் அதிகாரப்பூர்வ உத்தரவு மற்றும் முழுமையான விவரங்கள் வெளியிடப்படுவது எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் தற்போது ஒப்பந்ததாரர்கள் மற்றும் உள்ளாட்சி நிர்வாக வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: புதிய சமுதாயத்தை உருவாக்குவோம்! தியாகிகள் தினத்தில் முதல்வர் வீர வணக்கம்! உருக்கமான அழைப்பு!