ஜெயலலிதாவின் வழியை பின்பற்றும் கவிதா!? தெலுங்கானாவின் அம்மா என சுய பிரகடனம்!!
தெலுங்கானாவின் நான்கு கோடி மக்களுக்கும் தான் ஒரு, 'அம்மா' போல இருப்பேன் முன்னாள் முதல்வருமான சந்திரசேகர ராவின் மகள் கவிதா, கூறியுள்ளார்.
தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா, தன் தந்தைக்கு எதிராக புதிய கட்சியைத் தொடங்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை முன்மாதிரியாகக் கொண்டு, “தெலுங்கானாவின் நான்கு கோடி மக்களுக்கும் நான் ஒரு ‘அம்மா’வாக இருப்பேன்” என்று உணர்ச்சிபூர்வமாக அறிவித்தார்.
பாரத் ராஷ்ட்ர சமிதி (பி.ஆர்.எஸ்.) கட்சியில் இருந்து 10 மாதங்களுக்கு முன் நீக்கப்பட்ட கவிதா, தன் தந்தை சந்திரசேகர ராவுக்கு எதிராக நேரடியாக தாக்குதல் நடத்தியுள்ளார். புதிய கட்சியான ‘தெலுங்கானா ராஷ்ட்ர சேனா’வை தொடங்கிய அவர், கட்சி துவக்க விழாவில் பேசுகையில், “என் தந்தை இப்போது ‘ரோபோ’ போல மாறிவிட்டார். மக்களின் துயரங்களைப் பார்த்து அவர் கலங்குவதில்லை. அவர் கட்சியில் உள்ள சில ஓநாய்கள் மற்றும் நரிகளின் பிடியில் சிக்கியுள்ளார்” என்று கடுமையாக விமர்சித்தார்.
கவிதா தன் சகோதரர் கே.ராமா ராவ் மற்றும் உறவினர் ஹரிஷ் ராவ் ஆகியோரை ஏற்கனவே தொடர்ச்சியாக விமர்சித்து வந்த நிலையில், இப்போது முதன்முறையாக தன் தந்தை சந்திரசேகர ராவையும் நேரடியாக தாக்கியுள்ளார். இலவச கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் மருத்துவ வசதி ஆகியவற்றை தன் கட்சியின் முக்கிய முழக்கங்களாக அவர் முன்வைத்துள்ளார்.
இதையும் படிங்க: "ஒரிஜினல் எப்போதும் ஒரிஜினல்தான்" BRS-க்கு போட்டியா TRS? சந்திர சேகர் ராவ் மகளுக்கு பதிலடி!
சந்திரசேகர ராவ் 10 ஆண்டுகள் ஆட்சி செய்த பிறகு 2023 சட்டசபைத் தேர்தலிலும், 2024 லோக்சபா தேர்தலிலும் படுதோல்வி அடைந்தார். அதன் பிறகு அவர் பொது வெளியில் தலைகாட்டவில்லை. குடும்பத்துக்குள் ஏற்பட்ட விரிசல் இப்போது புதிய கட்சியாக உருவெடுத்துள்ளது.
கவிதா ஏற்கனவே நிஜாமாபாத் தொகுதியில் எம்.பி.யாக இருந்தவர். டெல்லி மதுபான ஊழல் வழக்கில் கைதாகிய அவர், பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு பி.ஆர்.எஸ். கட்சியின் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்ததாகக் கூறப்படுகிறது.
தெலுங்கானா அரசியலில் இது 15-வது ‘தெலுங்கானா’ என்ற பெயரில் தொடங்கப்படும் கட்சி. இந்தப் புதிய கட்சி வெற்றி பெறுமா அல்லது பி.ஆர்.எஸ். கட்சியின் ஓட்டுகளைப் பிரித்து காங்கிரஸுக்கு மறைமுக உதவி செய்யுமா என்பதை அடுத்த சில மாதங்களில் பார்க்க வேண்டும்.
கவிதாவின் இந்த அதிரடி நடவடிக்கை, தெலுங்கானா அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "ஒரிஜினல் எப்போதும் ஒரிஜினல்தான்" BRS-க்கு போட்டியா TRS? சந்திர சேகர் ராவ் மகளுக்கு பதிலடி!