×
 

ஏஐ மாநாட்டில் நடக்கும் அசிங்கம்!! மன்னிப்பு கேட்ட மத்திய அமைச்சர்! வெளுத்து வாங்கும் காங்., தலைவர் கார்கே!!

போதிய திட்டமிடல் இல்லாததால், இந்தியாவின் தொழில்நுட்பத் திறனை உலகுக்குக் காட்டும் ஒரு முக்கியமான நிகழ்ச்சி பாழாகியுள்ளது.

டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் 'இந்தியா AI இம்பாக்ட் சமிட் 2026' உலகின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு மாநாடாக கருதப்படுகிறது. 5 நாட்கள் நடைபெறும் இந்த மாநாடு பிப்ரவரி 20ஆம் தேதி முடிவடைகிறது. 

நேற்று முன்தினம் (பிப்ரவரி 16) பிரதமர் நரேந்திர மோடி இதை தொடங்கி வைத்தார். 70,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்ட இடத்தில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், 600க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், 13 நாடுகளின் அரங்குகள் உள்ளிட்ட பிரமாண்ட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளின் ஏஐ கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டு விளக்கம் அளிக்கப்படுகிறது.

ஆனால், மாநாட்டின் முதல் நாள் ஏற்பாடுகளில் பெரும் குளறுபடி ஏற்பட்டது. பார்வையாளர்கள், கண்காட்சியாளர்கள், சர்வதேச நிறுவன பிரதிநிதிகள் நீண்ட வரிசைகள், கூட்ட நெரிசல், உணவு-குடிநீர் பற்றாக்குறை, இணைய இணைப்பு பிரச்சினை ஆகியவற்றால் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள். 

இதையும் படிங்க: ஏஐ தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னோடி!! சிறந்த எதிர்காலம் உருவாகும்!! பிரதமர் மோடி நம்பிக்கை குரல்!

சில ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தங்கள் ஏஐ தயாரிப்புகளை காட்சிப்படுத்த அனுமதி மறுக்கப்பட்டதாகவும், செலவு செய்து வந்தவர்கள் விரக்தியுடன் திரும்பியதாகவும் புகார்கள் எழுந்தன. பாதுகாப்பு காரணங்களால் லேப்டாப், கேமரா போன்ற பொருட்கள் தடை செய்யப்பட்டன. சில இடங்களில் பொருட்கள் திருடு போனதாக குற்றச்சாட்டுகள் வந்தன – பின்னர் 24 மணி நேரத்தில் மீட்கப்பட்டன.

இந்த குளறுபடிகளால் பெரும் விமர்சனங்கள் எழுந்தன. மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்கள் சந்திப்பில் பகிரங்க மன்னிப்பு கேட்டார். “முதல் நாளில் 70,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

அதிக கூட்டம் காரணமாக சிரமங்கள் ஏற்பட்டன. யாருக்காவது இடையூறு ஏற்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். 'வார் ரூம்' அமைத்து புகார்களை உடனடியாக தீர்க்கிறோம். எஞ்சிய நாட்களில் ஏற்பாடுகள் சீராக இருக்கும்” என்றார்.

இதை விமர்சித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “இது அரசின் மோசமான நிர்வாகத்தை காட்டுகிறது. போதிய திட்டமிடல் இல்லாததால், இந்தியாவின் தொழில்நுட்ப திறனை உலகுக்கு காட்ட வேண்டிய முக்கிய நிகழ்ச்சி பாழாகியுள்ளது. உணவு-நீர் பற்றாக்குறை, திருட்டு, டிஜி யாத்ரா தோல்வி, லேப்டாப் தடை போன்றவை அவமானத்தை ஏற்படுத்தியுள்ளன” என்று கடுமையாக சாடினார்.

இருப்பினும், மாநாடு தொடர்ந்து நடைபெறுகிறது. உலக தலைவர்கள், டெக் ஜாம்பவான்கள் கலந்து கொள்கின்றனர். எஞ்சிய நாட்களில் சீரான ஏற்பாடுகளுடன் இந்தியாவின் ஏஐ திறன் வெளிப்படுமா என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க: ஆட்சியில் பங்கு? மாநிலத்தில் சுயாட்சி... மத்தியில் கூட்டாட்சி..! பேரவையில் உரக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share