மோசடி வழக்கில் கைதான பாஜக நிர்வாகி... சாட்டையை சுழற்றிய நயினார் நாகேந்திரன்!!
தமிழக பாஜகவில் ஓபிசி அணியின் மாநில செயலாளராக இருந்த கே ஆர் வெங்கடேஷ் அப்பொறுப்பில் இருந்தும், பாஜக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பாஜகவில் ஓபிசி அணியின் மாநில செயலாளராக இருந்து வந்தவர் கே ஆர் வெங்கடேஷ். இவருக்கு மிளகாய் பொடி வெங்கடேசன் என்ற பெயரும் உண்டு. இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. குறிப்பாக தமிழகம், கேரளா மற்றும் ஆந்திராவில் செம்மரக்கட்டை கடத்தல் மிரட்டல் மற்றும் பணமோசடி என 60க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ரவுடிகள் பட்டியலிலும் இவரது பெயர் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே தான் கடந்த 8 ஆம் தேதி மதுரை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கே ஆர் வெங்கடேஷ் சந்தித்துள்ளார். அதுமட்டுமின்றி அந்த புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பதிவு செய்ததோடு தமிழகம் மற்றும் ஆந்திரா போலீசாரை டேக் செய்து பதிவிட்டு இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இதையும் படிங்க: சேதாரம் உங்களுக்கு தான்.. கண்ணாடி வீட்டிலிருந்து கல் எறியாதீங்க.. அமித்ஷாவுக்கு முதல்வர் பதிலடி!
இந்த நிலையில் தான் தொழில் அதிபர்களை மிரட்டி பணம் மோசடி செய்த வழக்கில் கே ஆர் வெங்கடேஷை நேற்று போலீசார் கைது செய்தனர். இதையடுத்து இன்று அவரை பாஜவின் அடிப்படை உறுப்பினர் மற்றும் தமிழக பாஜக மாநில ஓபிசி அணி செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கம் செய்து நயினார் நாகேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
இதுக்குறித்த அவரது அறிவிப்பில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில செயலாளராக பணியாற்றி வந்த K.R.வெங்கடேஷ், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததாலும், கட்சியின் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுகிறார். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நயினார் தலைமையில் வாகனப் பேரணி... போலீசுக்கே தண்ணி காட்டிய பாஜகவினர்!