உடனே இதை நிறுத்துங்க ஸ்டாலின்... இல்லைன்னா சாதி, மத மோதல்கள் வெடிக்கும்... முதல்வரை எச்சரித்த கிருஷ்ணசாமி...!
உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.
புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் புதிதாக அமைக்கப்படும் தொழிற்சாலைகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் உரிய முறையில் தமிழகத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்காமல் துப்புரவு பணியில் மற்றும் கட்டிடப் பணி போன்ற வேலைகளை அளித்து வருகின்றனர் . எனவே இதை தடுப்பதற்காக தமிழக அரசு பன்னாட்டு தொழில் நிறுவனங்களில் உரிய வேலைவாய்ப்பு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்காக சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்.
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் வைகுண்ட பெருமாள்புரம் பகுதியில் குளங்களை ஆக்கிரமிப்பு செய்ததை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பொட்டலுர்னி பகுதியில் மீன் கழிவு அறைகளை உடனடியாக மூட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் வருகிற அக்டோபர் 16-ஆம் தேதி புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் முறையாக நடைபெறாமல் தற்போது 30 நாட்கள் மட்டுமே வேலை வழங்கும் நிலை இருக்கிறது. எனவே கிராமப்புறங்களில் வேறு எந்த வேலை வாய்ப்பு இல்லாத நாளில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் முறையாக வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதையும் படிங்க: விஜய் உடன் கூட்டணி... திடீரென அந்தர் பல்டி அடித்த கிருஷ்ணசாமி... மதுரை டூ நெல்லை மனமாற்றம்..!
உள்ளாட்சி நிர்வாகம் முழுவதும் ஊழல் ஆட்சி நிர்வாகமாக இருக்கிறது. தென் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு மாவட்ட நிர்வாகங்கள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் செருப்பு வீசிய சம்பவம் கண்டனத்திற்குரியது என்றார்.
மேலும் தமிழக அரசு சார்பில் தற்போது பேருந்து நிலையங்கள், அரசு கட்டிடங்கள், பாலங்கள் ஆகியவற்றிற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் பெயர் சூட்டப்பட்டு வருகின்றன. இது கடந்த 1997 ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்ட முடிவிற்க்கு எதிரானது. எனவே தமிழக அரசு தமிழக அரசு சார்பில் கட்டப்படும் கட்டிடங்கள், பாலங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றிகாக முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோர் பெயர்கள் வைப்பதை நிறுத்த வேண்டும். இவ்வாறு வைப்பதன் காரணமாக ஜாதி, மத, இன மோதல்கள் மீண்டும் உருவாக வாய்ப்புள்ளது. ஒன்றுபட்ட சமுதாயமாக மாறக்கூடிய இந்த காலகட்டத்தில் இவ்வாறு பெயர் வைப்பதன் மூலம் ஜாதி, மத, இன அடிப்படையில் மீண்டும் பிளவு பட வாய்ப்பு உள்ளது. எனவே பெயர் வைக்கும் கலாச்சாரத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
சமூக வலைதளத்தில் பொறுப்பெற்ற முறையில் கருத்துக்களை போடுவது நியாயம் கிடையாது. ஆனால் தமிழக அரசு நடுநிலைமையோடு செயல்பட வேண்டும். அரசுக்கு சாதகமான கருத்துக்கள் போட்டால் பேசாமல் விட்டு விடுகிறார்கள். அரசுக்கு எதிராக கருத்துக்கள் போடுபவர்களை கைது செய்கிறார்கள். இதுதான் நடக்கிறது நாங்கள் நூற்றுக்கணக்கான புகார்கள் காவல்துறையிடம் கொடுத்தால் ஒரு வழக்கு கூட பதிவு செய்ய மறுக்கிறார்கள். ஆனால் வேறு ஏதாவது என்றால் உடனடியாக கைது செய்கிறார்கள். எனவே சமூக வலைதளங்களை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும். சமூக வலைதளங்களில் போலியான அக்கவுண்டுகள் வைத்திருப்பவர்கள் தான் பிரச்சனை. எனவே தமிழக அரசு இந்த போலியான அக்கவுண்ட்களை ஒழித்துக் கட்ட வேண்டும் எனக்கூறினார்.
இதையும் படிங்க: தென்னமர சின்னத்துல ஒரு குத்து… பனை மர சின்னத்துல ஒரு குத்து… யாரு சாமி நீ? கலாய்த்த அதிமுக…!