மேற்குவங்கத்தில் சூடுபிடிக்கும் 2ம் கட்ட தேர்தல்!! பவானிபூரில் முதல்வர் மம்தா ரோடு ஷோ!
மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பவானிபூர் தொகுதியில் மமதா பானர்ஜி சாலைவலம் மேற்கொண்டார்.
மேற்கு வங்கம்: மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான மமதா பானர்ஜி பவானிபூர் தொகுதியில் பிரமாண்ட சாலைவலம் மேற்கொண்டார். ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் லான்ஸ்டவுன் கிராசிங் முதல் காளிகாட் வரை நடைபெற்ற இந்த சாலைவலம் பெரும் உற்சாகத்துடன் காணப்பட்டது.
சாலைவலத்தின் போது “வங்காளமே மீண்டும் வெற்றி பெறும்” என்ற பாடல் பின்னணியில் ஒலிக்கப்பட்டது. “தீதி தீதி” என்ற கோஷங்கள் விண்ணைப் பிளக்க, மமதா பானர்ஜி மக்களிடையே நடந்து சென்றபடி கை கொடுத்தும், அவர்கள் அணிவித்த மாலைகளை ஏற்றும் வகையில் உற்சாகமாக பிரசாரம் செய்தார். சிலர் அவரது பாதங்களைத் தொட்டு வணங்க முயன்றபோது, பாதுகாவலர்கள் தடுக்க முயன்றதை மமதா தடுத்து நிறுத்தினார். அவர்களுடன் நெருங்கிப் பேசி, மக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.
பாரம்பரிய மேள ஒலியுடன், புருலியாவின் புகழ்பெற்ற சௌ நடனம் இந்த சாலைவலத்தில் இடம்பெற்று மக்களை மேலும் உற்சாகப்படுத்தியது. மமதா பானர்ஜியுடன் அமைச்சர் பிர்ஹாத் ஹக்கீம் உள்ளிட்ட தெற்கு கொல்கத்தா திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: அடுத்த டார்கெட் டெல்லி தான்!! மேற்கு வங்க வெற்றிக்கு பின் டெல்லியை கைப்பற்றுவேன் - மம்தா!
பவானிபூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் மமதா பானர்ஜியை, எதிர்க்கட்சித் தலைவரும் பாஜக மூத்த தலைவருமான சுவேந்து அதிகாரி எதிர்த்து போட்டியிடுகிறார். இந்தத் தொகுதி தேர்தலில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
சாலைவலத்தின்போது மமதா பானர்ஜி மக்களிடம், “வங்காளத்தின் கௌரவத்தையும், பாரம்பரியத்தையும் பாதுகாக்க நீங்கள் அனைவரும் தாமரைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் மேற்கு வங்கம் பாதுகாப்பாகவும், அமைதியாகவும் உள்ளதாகவும், வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.
தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளில் மமதாவின் இந்த சாலைவலம் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் சாலையின் இருபுறமும் நின்று மமதாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். பெண்கள் மற்றும் இளைஞர்கள் அதிக அளவில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், மமதா பானர்ஜியின் இந்தப் பிரசாரம் கட்சியின் வெற்றிக்கு பெரும் ஊக்கமாக அமையும் என்று திரிணமூல் தலைவர்கள் நம்புகின்றனர்.
இதையும் படிங்க: மிகப்பெரிய மாற்றம் நிகழ போகிறது!! மக்கள் எழுச்சி அப்பிடி!! மேற்குவங்கத்தில் மோடி சூசகம்!!