×
 

வைகோவுக்கு டாட்டா! மதிமுகவில் இருந்து விலகினார் சீர்காழி எம்எல்ஏ!! திமுகவில் இணைய செந்தில்செல்வன் திட்டம்?!

சென்னையில் இன்று நடந்த மதிமுக உயர்நிலைக்குழு கூட்டத்துக்கு சீர்காழி எம்எல்ஏ செந்தில்செல்வன் வரவில்லை. தான் மதிமுகவில் இருந்து விலகி விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற உயர்நிலைக் குழு கூட்டத்துக்கு சீர்காழி எம்எல்ஏ செந்தில் செல்வன் வரவில்லை. கூட்டத்துக்குப் பிறகு அவர் தனது ஆதரவாளர்களுடன் பேசியபோது, “நான் மதிமுகவிலிருந்து விலகிவிட்டேன்” என அதிரடியாக அறிவித்தார். இந்த சம்பவம் மதிமுகவுக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜுனராஜ் தலைமையில் நடைபெற்ற உயர்நிலைக் குழு கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். நாளை (ஜூன் 27) அண்ணா நகரில் நடைபெறவிருக்கும் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் மற்றும் தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகுவது குறித்து இன்றைய கூட்டத்தில் தீவிர ஆலோசனை நடைபெற்றது. 

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக, சீர்காழி மற்றும் கடையநல்லூர் தொகுதிகளில் வெற்றி பெற்றது. தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் மதிமுக தலைமை, விரைவில் அந்தக் கட்சியுடன் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உதய சூரியன் சின்னத்தில் வெற்றி பெற்ற இரு எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என தலைமை வற்புறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சீர்காழி எம்.எல்.ஏ. ஆப்சென்ட்! கையை பிசையும் வைகோ! மதிமுக உயர் நிலைக் குழு கூட்டத்தில் பரபரப்பு!

ஒரு எம்எல்ஏ இந்த முடிவை ஏற்றுக் கொண்ட நிலையில், செந்தில் செல்வன் மட்டும் ராஜினாமாவுக்கு மறுப்பு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின்றன. இதனாலேயே அவர் இன்றைய உயர்நிலைக் குழு கூட்டத்தை புறக்கணித்தார் எனக் கூறப்படுகிறது. 

மதிமுகவில் இந்த உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், நாளை நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகுவது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. செந்தில் செல்வனின் விலகல் அறிவிப்பு மதிமுகவின் உள் நிலவரத்தை மேலும் சிக்கலாக்கியுள்ளது. 

வைகோ தலைமையிலான மதிமுக தற்போது முக்கியமான திருப்புமுனையில் உள்ளது. தவெகவுடன் இணைவதா அல்லது தி.மு.க. உடன் தொடர்வதா என்பது குறித்த முடிவு நாளை தெரியவரும். செந்தில் செல்வனின் நடவடிக்கை மதிமுகவுக்குள் புதிய பிளவை உருவாக்குமா என்பதும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

இதையும் படிங்க: இடைத்தேர்தலில் யாருடன் கூட்டணி? திமுகவா? தவெகவா? குழப்பத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share