கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்தில் பின்னடைவு... தமிழகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய நிம்மதி!
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறி, கர்நாடகத்தின் மேக்கேதாட்டு விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர்வளத் துறை ஆணையம் திருப்பி அனுப்பி வைத்ததாகத் தெரித்துள்ளது.
காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு முக்கிய திருப்பமாகக் கருதப்படும் ஒரு புதிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக அரசு சமர்ப்பித்த மேகதாது அணை திட்டத்தின் திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை (DPR), காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கும், உச்ச நீதிமன்றத்தின் 2018-ஆம் ஆண்டு தீர்ப்புக்கும் முரணாக இருப்பதாகக் கூறி, மத்திய நீர் ஆணையம் (CWC) அதை திருப்பி அனுப்பியுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) மூலம் வெளியாகியுள்ளது.
தமிழக எல்லைக்கு அருகே மேகதாதுப் பகுதியில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு நீண்டகாலமாக முயற்சி செய்து வருகிறது. அந்தத் திட்டத்தின் திருத்தப்பட்ட அறிக்கையை கடந்த ஜூன் 7-ஆம் தேதி மத்திய நீர் ஆணையத்திடம் சமர்ப்பித்திருந்தது. ஆனால், அந்த அறிக்கையை ஆய்வு செய்த ஆணையம், அதில் இடம்பெற்றுள்ள பல அம்சங்கள் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுகளுடன் ஒத்துப்போகவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக, கர்நாடக அரசு திட்டத்தில் அதிகளவு நீர் பயன்பாட்டை கோரியிருப்பதுடன், காலாவதியான தரவுகளையும் பயன்படுத்தியிருப்பதாக மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால், புதிய தகவல்கள் மற்றும் சட்ட விதிகளுக்கு ஏற்ப முழுமையாக திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை மீண்டும் தாக்கல் செய்யுமாறு கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விஜய் முதல்வராக இருக்கும் வரை! மேகதாது அணை கட்ட ஒரு செங்கல் கூட வைக்க முடியாது! அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி!
முதலில் மேகதாது திட்டம் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் சமநிலைப்படுத்தும் நீர்த்தேக்கமாக முன்வைக்கப்பட்டிருந்தது. பின்னர் சமர்ப்பிக்கப்பட்ட திருத்தப்பட்ட அறிக்கையில், சிவனசமுத்திரம் மின் உற்பத்தி திட்டத்தையும் இணைத்து, பயன்படுத்தப்படும் நீரின் அளவை 4.75 டி.எம்.சி.யிலிருந்து 6.95 டி.எம்.சி. ஆக உயர்த்தியிருப்பது மத்திய நீர் ஆணையத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும், 59.46 டி.எம்.சி. நேரடி சேமிப்புத் திறன் கொண்ட நீர்த்தேக்கத்திற்கு கர்நாடகம் அளித்துள்ள விளக்கமும் போதுமானதாக இல்லை என்றும், குடிநீர் சேமிப்பு தொடர்பான கட்டாய நிபந்தனைகள் திட்ட அறிக்கையில் தெளிவாக இடம்பெறவில்லை என்றும் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேகதாது அணை கட்டப்பட்டால் காவிரி நீர் ஓட்டம் பாதிக்கப்படும் என்றும், தமிழ்நாட்டின் பாசனமும் குடிநீர் தேவையும் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் தமிழக அரசும், விவசாய அமைப்புகளும், பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், மத்திய நீர் ஆணையம் திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பியிருப்பது மேகதாது அணை விவகாரத்தில் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், இது திட்டம் நிரந்தரமாக நிராகரிக்கப்பட்டுவிட்டது என்பதல்ல; திருத்தப்பட்ட அறிக்கையை மீண்டும் கர்நாடக அரசு சமர்ப்பிக்க வாய்ப்பு இருப்பதால், இந்த விவகாரம் தொடர்ந்து கவனிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: காவிரி, மேகதாது விவகாரம்! மு.க.ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விளக்கம்!