காவிரி நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவோம்! கடைமடை வரை பகிர்ந்தளிப்போம்! முதல்வர் விஜய் வேண்டுகோள்!
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீர் கடைமடை பகுதிகள் வரை முறையாக சென்றடைவதை உறுதி செய்ய அரசு துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சேலம்: காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடியை மேற்கொள்ளவும், காவிரி படுகைப் பகுதிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும் மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தண்ணீரை திறந்து வைத்தார்.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 91.56 அடியாக இருந்தது. அணையில் 54.452 டி.எம்.சி. அளவுக்கு நீர் இருப்பு உள்ள நிலையில், அணைக்கு வினாடிக்கு 10,857 கனஅடி நீர் வந்து கொண்டிருந்ததாக அரசு தெரிவித்துள்ளது.
டெல்டா பகுதிகளில் சம்பா சாகுபடிக்கான பணிகள் தொடங்க உள்ள நிலையில், மேட்டூரில் இருந்து திறக்கப்படும் நீர் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், அணையில் உள்ள நீர் இருப்பு மற்றும் தொடர்ந்து கிடைக்கும் நீர்வரத்தை கருத்தில் கொண்டு, பாசன தேவைக்கு ஏற்ப தண்ணீர் வெளியேற்றம் படிப்படியாக முறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முதல்வர் விஜய் பாதுகாப்புப் பணியில் திடீர் பரபரப்பு! 2 போலீஸ் அதிகாரிகள் மயங்கி விழுந்ததால் அதிர்ச்சி!
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீர் கடைமடை பகுதிகள் வரை முறையாக சென்றடைவதை உறுதி செய்ய அரசு துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேளாண்மை, நீர்வளம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைகள் மாவட்ட நிர்வாகங்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளன.
காவிரி ஆறு மற்றும் கால்வாய்களில் சட்டவிரோதமாக மின்மோட்டார்கள் மூலம் தண்ணீர் உறிஞ்சுவது, அனுமதியின்றி நீர் எடுப்பது உள்ளிட்ட செயல்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இதற்காக நீர்வளத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் மின்வாரிய அதிகாரிகளை உள்ளடக்கிய கூட்டு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
காவிரி நீர் தொடர்பாக தமிழகத்துக்கு கிடைத்துள்ள சட்டப்பூர்வ உரிமையை எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். நடுவர்மன்ற இறுதி தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்றத்தின் 2018-ம் ஆண்டு தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்துக்கு உரிய நீரை பெறுவதற்கான சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே, தென்மேற்கு பருவமழை பற்றாக்குறை மற்றும் எல் நினோ தாக்கம் உள்ளிட்ட காரணங்களை கருத்தில் கொண்டு, தற்போது கிடைக்கும் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதனால் விவசாயிகள் குறைந்த நீர் தேவை கொண்ட மத்திய கால நெல் ரகங்களை தேர்வு செய்யவும், நேரடி நெல் விதைப்பு போன்ற நீர் சிக்கன முறைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
“நீரை சிக்கனமாக பயன்படுத்துவோம்; கடைமடை வரை பகிர்ந்தளிப்போம்; சம்பா சாகுபடியை வெற்றிகரமாக்குவோம்” என்ற நோக்கத்துடன் நீர் மேலாண்மை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளதால் காவிரி டெல்டா விவசாயிகள் சம்பா சாகுபடிக்கான பணிகளை தீவிரப்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது. ஆனால் அணையின் நீர் இருப்பு, வரத்து மற்றும் பருவமழை நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்தே அடுத்தகட்ட நீர் மேலாண்மை முடிவுகள் எடுக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மேட்டூர் அணையை நாளை திறக்கிறார் முதல்வர் விஜய்! 10 ஆயிரத்தை கடந்த நீர்வரத்து! டெல்டா விவசாயிகளுக்கு குட்நியூஸ்!