×
 

செந்தில் பாலாஜி, அசோக்குமார் குற்றவாளிகள்... முக்கியமான பாயிண்ட்டை பிடித்து திமுகவை தெறிக்கவிட்ட நிர்மல் குமார்...!

முதல்வர் கரூர் செல்வதைக் கண்டு திமுக பயப்படுவது ஏன்? சம்மனுக்கு அஞ்சி ஓடி ஒளிபவர்கள் குற்றவாளிகளே என்று அமைச்சர் நிர்மல் குமார் கோவையில் பேட்டி அளித்துள்ளார். 

முதலமைச்சர் கரூர் செல்வதைக் கண்டு திமுகவினர் தேவையற்ற அச்சம் அடைவதாகவும், விசாரணைச் சம்மனுக்கு ஆஜராகாமல் ஓடி ஒளிபவர்கள் தங்களது குற்றத்தை ஒப்புக்கொள்வதைப் போன்றது என்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் விமர்சித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசினார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும், எந்த இடத்திற்கும் செல்வதற்கு நூறு சதவீதம் உரிமை உள்ளது என்று அவர் தெரிவித்தார். ஆனால், முதலமைச்சர் கரூருக்குச் செல்வதைக் கண்டு திமுகவினர் ஏன் இவ்வளவு பயப்படுகிறார்கள் என்பது புரியவில்லை என்றும், முதலமைச்சர் சென்றால் அங்குள்ள மக்கள் என்னென்ன உண்மைகளைச் சொல்லிவிடுவார்களோ என்ற அச்சமே இதற்குச் காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

இதனைத் தடுப்பதற்காக எந்த அடிப்படை விவரமும் இல்லாமல் திமுகவின் சட்டக் குழு உச்சநீதிமன்றம் வரை சென்று மனுத்தாக்கல் செய்து அனைவரின் நேரத்தையும் வீணடிப்பதாக அமைச்சர் தெரிவித்தார். வழக்கை முழுமையாகப் படித்துவிட்டு வாருங்கள் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகளே திமுக தரப்புக்கு அறிவுறுத்தும் அளவுக்கு அவர்களின் மனுக்கள் இருந்ததாகச் சுட்டிக்காட்டிய அவர், கடந்த பல ஆண்டுகளாக மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல் துரோகம் செய்தவர்கள் தற்போது முதலமைச்சரின் பயணத்தைக் கண்டு அஞ்சுவதாகக் கூறினார்.

இதையும் படிங்க: ஆளுநர் மாளிகைக்குள்ள இருக்குற வேலையை மட்டும் பார்த்தா போதும்... அர்லேகரை எச்சரித்த நிர்மல் குமார்...!

அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பினர் மற்றும் அவரது சகோதரர் அசோக் ஆகியோர் காவல்துறையினரின் விசாரணைக்கு ஆஜராகாமல் இருப்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார், சம்மன் அளிக்கப்பட்டால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பதில் என்ன சிக்கல் இருக்கப் போகிறது என்று கேள்வி எழுப்பினார். குற்றத்தில் ஈடுபாடு இருப்பதால் மட்டுமே அவர்கள் சம்மனுக்கு ஆஜராகாமல் ஓடி ஒளிவதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த காலங்களில் தங்களுக்கு டெல்லியில் சிபிஐ சம்மன் அனுப்பியபோது தாங்கள் நேரில் சென்று ஆஜராகி விளக்கம் அளித்ததை நினைவுகூர்ந்த அமைச்சர், செந்தில் பாலாஜி தன்னை சட்டத்திற்கு அப்பாற்பட்டவராக நினைத்துக்கொள்ளக் கூடாது என்றும், காவல்துறை தனது கடமையைச் சரியாகச் செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

அரசுத் துறைகளில் ஆட்கள் தேர்வு மற்றும் மின் கட்டணம் குறித்துப் பேசிய அமைச்சர், தற்போது மின் கட்டண உயர்வு எதுவும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தினார். பல மாநிலங்களை விடத் தமிழகத்தின் மின்சாரத் துறை அதிக கடனில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், அத்துறையை முழுமையாகச் சீரமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாகக் கூறினார். மேலும், சுமார் 15 ஆயிரம் பேர் ஆறு மாத காலத்திற்குத் தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளதாகவும், இதற்கான ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பெற்று, பின்னணிச் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தத் தற்காலிகப் பணி நியமனங்கள் நூறு சதவீதம் நேர்மையான முறையில் நடைபெற்று வருவதாகவும், எந்தவொரு சிபாரிசுக் கடிதத்தின் அடிப்படையிலும் யாருக்கும் பணி வழங்கப்படவில்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். தகுதியின் அடிப்படையில் மட்டுமே வெளிப்படைத்தன்மையுடன் ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நிர்மல்குமார் உத்தமபுத்திரனா?... தவெகவுக்கு முட்டுக்கொடுத்ததே திமுக தான்... அடித்து நொறுக்கிய ரகுபதி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share