×
 

“ஒரு செங்கல்லை வைக்கக்கூட...” - மேகதாது அணை விவகாரத்தில் கொந்தளித்த செங்கோட்டையன்...!

புதிய தமிழகத்தின் அனைத்து கட்சிக் கூட்டத்தில் எத்தனை பேர் பங்கேற்பார்கள் என்பது அப்போதுதான் தெரியும் என்று அமைச்சர் செங்கோட்டையன் பேசியுள்ளார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கான முயற்சிகளை கர்நாடக அரசு மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்திற்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்று கர்நாடக அரசு அண்மையில் ஒன்றிய அரசிடம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

மேலும், கர்நாடக அமைச்சர்கள், டெல்லியில் உள்ள மாநில அரசின் பிரதிநிதிகள் மற்றும் சட்ட அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மேகதாது திட்டத்தை விரைவுபடுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மறுபுறம், மேகதாது அணை கட்டப்பட்டால் காவிரி நீரின் இயற்கை ஓட்டம் பாதிக்கப்பட்டு, டெல்டா மாவட்டங்களின் பாசனமும் குடிநீர் தேவையும் கடுமையாக பாதிக்கப்படும் என்று தமிழ்நாடு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இதையும் படிங்க: விஜய் முதல்வராக இருக்கும் வரை! மேகதாது அணை கட்ட ஒரு செங்கல் கூட வைக்க முடியாது! அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி!

தமிழ்நாடு அரசு ஏற்கனவே இந்தத் திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றம், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் ஒன்றிய அரசிடம் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. கர்நாடக அரசு தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணைத் திட்டத்தை முன்னெடுக்கக் கூடாது என்பதே தமிழகத்தின் நிலைப்பாடாக இருந்து வருகிறது.

இந்தச் சூழலில், பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் நோக்கில் முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்லக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இதுகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. எனவே, இன்று நடைபெறும் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளே, முதலமைச்சர் கர்நாடகா செல்வாரா, அல்லது மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பதை தீர்மானிக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

இதனிடையே, கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: மேகதாது அணையைப் பொறுத்தவரை, ஒரு செங்கலைக்கூட வைக்க தமிழக அரசு அனுமதிக்காது என்று முதலமைச்சர் தெளிவாகக் கூறியுள்ளார். அந்த நேரத்தில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதை நிச்சயமாக மேற்கொள்வார்.

ஒரு இயக்கம் எது வேண்டுமானாலும் செய்யலாம். புதிய தமிழகத்தின் அனைத்து கட்சிக் கூட்டத்தில் எத்தனை பேர் பங்கேற்பார்கள் என்பது அப்போதுதான் தெரியும்.  ஒவ்வொரு இயக்கமும் தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.  பொதுமக்களின் பிரச்சினைக்காக நடைபெறும் அந்தக் கூட்டத்தில் யார் யார் பங்கேற்கிறார்கள் என்பது அப்போதுதான் தெரியும் எனக்கூறினார். 

இதையும் படிங்க: செங்கோட்டையன் வச்ச குறி... இபிஎஸ் உறவினர் ஆலைக்கு சிக்கல்... அதிகாரிகளோட களமிறங்கிய அமைச்சர்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share