எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கு நிம்மதி! நேரில் ஆஜராக விலக்கு... சொத்துக்குவிப்பு வழக்கில் ஹைகோர்ட் நிவாரணம்!
சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு கடலூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு விலக்களித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய இடைக்கால நிவாரணம் வழங்கியுள்ளது. கடலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டிய அவசியம் இல்லை என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
கடந்த 2006 முதல் 2011 வரை அமைச்சராக இருந்த காலத்தில், வருமானத்திற்கு அதிகமாக சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான சொத்துகளை சேர்த்ததாக எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மீது லஞ்ச ஒழிப்புத் துறை 2011-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் அவரது மனைவி மற்றும் மகனும் இணைக்கப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த கடலூர் நீதிமன்றம், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அவரது மனைவி மற்றும் மகன் ஆகிய மூவரையும் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மூவரையும் விடுவித்த கடலூர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து, வழக்கு விசாரணையை தொடர உத்தரவிட்டது.
இதையும் படிங்க: "எ.வ.வேலுக்கு சிக்கல்! சாலை முறைகேடு வழக்கில் புதிய திருப்பம்... சுப்ரீம் கோர்ட்டை நாடும் தமிழக அரசு!"
இதையடுத்து, தங்களை மீண்டும் வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தரப்பில் கடலூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை கடலூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், கடலூர் நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், வழக்கு விசாரணையின்போது நேரில் ஆஜராகுவதில் இருந்து விலக்கு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், ஜூலை 30-ஆம் தேதிக்குள் லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க உத்தரவிட்டார். அதுவரை, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் கடலூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டிய அவசியம் இல்லை என்றும் இடைக்கால விலக்கு வழங்கினார். இந்த உத்தரவால் சொத்துக்குவிப்பு வழக்கில் புதிய சட்ட திருப்பம் ஏற்பட்டுள்ளதாக சட்ட நிபுணர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: இத செஞ்சு முடிச்சே ஆகணும்! ஆட்சியே அத நம்பிதான் இருக்கு!! தவெகவினருக்கு முதல்வர் விஜய் முக்கிய உத்தரவு!