தவெக தாவியவர்கள் பதவி இல்லாமல் தவிப்பு! விஜய் கொடுத்த ப்ராமிஸ்! இடைத்தேர்தலுக்கு பிறகு இருக்கு சம்பவம்!
தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட மாற்று கட்சிகளில் இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தவர்கள், அங்கு பதவி கிடைக்காமல் காத்திருக்கின்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) சேர்ந்த பல முக்கிய நிர்வாகிகள் இன்னும் கட்சிப் பதவிகளை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது. 2024 பிப்ரவரி 2-ம் தேதி முதல்வர் விஜய் த.வெ.க.வை தொடங்கிய நாளிலிருந்தே பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் அக்கட்சியில் இணைந்தனர்.
சட்டசபைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த பின்னர், அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளில் இருந்து நான்கு எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள் உள்ளிட்ட பலர் த.வெ.க.வில் இணைந்துள்ளனர்.
ஆனால், இவர்களில் பெரும்பாலானோருக்கு இதுவரை கட்சியில் எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை. த.வெ.க. மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: “கட்சிப் பொறுப்புகள் முதன்மையாக ரசிகர் மன்றத்தில் இருந்து வந்தவர்களுக்கே வழங்க வேண்டும் என தலைவர் விஜய் உறுதியாக இருக்கிறார்” என்றனர்.
இதையும் படிங்க: நீங்க ஓகே சொல்லுங்க விஜய்!? இப்போவே ராஜினாமா செய்ய சொல்லுறோம்! மதிமுக டீலை மறுக்கும் முதல்வர்?!
எனினும், தேவை கருதி வி.சி.க.வில் இருந்து வந்த ஆதவ் அர்ஜுனா தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளராகவும், அ.தி.மு.க.வில் இருந்து வந்த நிர்மல்குமார் இணை பொதுச் செயலாளராகவும், செங்கோட்டையன் தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர்.
என்றாலும், வெளியில் இருந்து வந்த 106 பேர் உள்ளிட்ட பலருக்கு சட்டசபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தும் கட்சிப் பதவி வழங்கப்படவில்லை. தற்போது சபாநாயகராக உள்ள ஜே.சி.டி. பிரபாகர், அமைச்சர்களான ஸ்ரீநாத், குமார், கமலி, கீர்த்தனா, ரஞ்சித்குமார், லோகேஷ் தமிழ்செல்வன், ராஜிவ் உள்ளிட்டோருக்கும் இன்னும் கட்சிப் பதவிகள் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், கட்சியில் தற்போது உள்ள 132 மாவட்ட செயலர்களின் எண்ணிக்கையை 160 ஆக உயர்த்தி புதியவர்களுக்கு பொறுப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பின்னர், த.வெ.க. சார்பு அணிகளில் மாநில அளவிலான பதவிகளும், பின்னர் மாவட்ட அளவிலான பதவிகளும் தகுதிக்கு ஏற்ப வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த மாற்றங்கள் அனைத்தும் இடைத்தேர்தல் முடிவுக்குப் பின்னரே நடைபெறும் என்பதால், புதிதாக இணைந்த முக்கியஸ்தர்கள் இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
த.வெ.க. ஆட்சியின் தொடக்கத்தில் இருந்தே பல்வேறு கட்சிகளில் இருந்து வரும் தலைவர்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்கு உரிய இடத்தை அளிப்பது எப்படி என்பது கட்சியின் முக்கிய சவாலாக உருவெடுத்துள்ளது.
இதையும் படிங்க: இடைத்தேர்தலில் மீண்டும் வாய்ப்பா? வாரிய தலைவர் பதவியா?! ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தவர்கள் குழப்பம்!