GenZ DMK என ஸ்டிக்கர் ஒட்டி கோமாளித்தனம் செய்ய வேண்டாம்! உதயநிதிக்கு தகுதி இருக்கா? அமைச்சர் நிர்மல்குமார் பாய்ச்சல்!
GenZ DMK என ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு பொதுவெளியில் கோமாளித்தனம் செய்ய வேண்டாம் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை அமைச்சர் நிர்மல்குமார் விமர்சித்தார்.
திருச்சியில் நடைபெற்ற அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்த தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டம், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.
நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்களில் "ஜென்சி டிஎம்கே" என்ற பெயரில் சிலர் பங்கேற்றதாக அமைச்சர் குற்றம்சாட்டினார். ஜெனரேஷன் இசட் (Gen Z) என்ற வார்த்தையின் அர்த்தம் தெரியாமல் திமுக செயல்படுவதாகவும், உதயநிதி ஸ்டாலினை சிலர் தவறாக வழிநடத்துவதாகவும் அவர் விமர்சித்தார்.
"ஜென்சி என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற விஷயங்களை வைத்து பொதுவெளியில் கோமாளித்தனம் செய்யாமல், ஆக்கப்பூர்வமான செயல்களில் கவனம் செலுத்த வேண்டும்" என உதயநிதிக்கு அமைச்சர் அறிவுரை வழங்கினார்.
இதையும் படிங்க: களத்தில் இறங்காத உதயநிதி!! தி.மு.க., நிர்வாகிகள் அதிருப்தி?! எம்.எல்.ஏ.,க்கள் கைதால் தொடங்கிய விவாதம்!!
மேலும், திமுகவை வழிநடத்தும் தகுதி யாருக்கு உள்ளது என்பதை அக்கட்சியே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் நிர்மல் குமார் தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலினுக்கா அல்லது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கா அதிக ஆதரவு உள்ளது என்பதை தேர்தல் மூலம் நிரூபிக்க முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேகதாது அணை விவகாரம் குறித்து பேசிய அமைச்சர், தமிழக முதல்வர் இந்த பிரச்னை தொடர்பாக பல்வேறு ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருவதாகவும், தமிழகத்தின் நலனை கருத்தில் கொண்டு ஆக்கப்பூர்வமான முடிவை எடுப்பார் என்றும் கூறினார். இரு மாநிலங்களுக்கும் பொதுவான பிரச்னையாக இருப்பதால் நேரடி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி நிறத்தில் அரசு பேருந்து வடிவமைக்கப்படுவதாக எழுந்த சர்ச்சை குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அரசு நிர்வாகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் துறை சார்ந்த தேவைகளுக்கேற்ப வடிவமைப்புகளை மேற்கொள்வார்கள் என்றும், அரசியல் கட்சியின் அடையாளத்தை முன்னிறுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார்.
அதிமுக நிர்வாகிகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், சிலர் தேவையற்ற விமர்சனங்களை முன்வைப்பதாக கூறி கடுமையாக விமர்சித்தார். மேலும், நீண்ட காலமாக சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகள் விடுதலை தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும், மத்திய அரசின் ஒத்துழைப்புடன் தீர்வு காண முயற்சி நடைபெறுவதாகவும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அப்பா மு.க.ஸ்டாலின் துவங்கிய #MISA_Batch! அடுத்த Innings-ஐ ஆரம்பிக்கலாமா..!- உதயநிதி கேம் ஸ்டார்ட்!