இந்தியாவுக்கு வரப்போகும் கனடா முதலீடு? நிதி நிறுவனங்களுக்கு நிர்மலா சீதாராமன் பெரிய ஆஃபர்!
இந்த சந்திப்புகளில் இந்தியாவின் உட்கட்டமைப்பு துறையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஒட்டாவா: கனடாவைச் சேர்ந்த முன்னணி நிதி நிறுவனங்களின் உயரதிகாரிகளை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவில் நீண்டகால முதலீடுகளை மேலும் அதிகரிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் பல்வேறு துறைகளில் உருவாகியுள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து அவர் எடுத்துரைத்துள்ளார்.
கனடா சென்றுள்ள நிர்மலா சீதாராமன், அந்நாட்டின் முக்கிய நிதி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் உயரதிகாரிகளை தொடர்ச்சியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த சந்திப்புகள் தொடர்பான தகவல்களை மத்திய நிதி அமைச்சகம் தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ளது.
சன் லைப் பைனான்ஷியல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கெவின் டி. ஸ்ட்ரெய்னை சந்தித்தபோது, இந்தியாவின் காப்பீட்டுத் துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கியுள்ளார். குறிப்பாக, காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டுக்கான வரம்பு 74 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையும் படிங்க: வங்கித் துறையில் வரப்போகும் அதிரடி மாற்றம்? நிர்மலா சீதாராமன் சொன்ன முக்கிய அறிவிப்பு!
மேலும், 2047-ம் ஆண்டுக்குள் நாட்டில் அனைவருக்கும் காப்பீடு என்ற அரசின் இலக்கு குறித்தும் அமைச்சர் எடுத்துரைத்துள்ளார். இந்தியாவில் காப்பீட்டுத் துறையில் நீண்டகால முதலீட்டுக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, கனக்கார்டு ஜென்யூயிட்டி நிறுவனத்தின் துணைத் தலைவர் ராட் பிலிப்ஸ் மற்றும் தலைமை செயல் அதிகாரி டான் டேவியாவையும் நிர்மலா சீதாராமன் சந்தித்துள்ளார். இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை ஆராயுமாறு அவர்களிடம் அமைச்சர் கேட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சி.பி.பி.ஐ.பி. தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஜான் கிரஹாம், ஓ.டி.பி.பி. தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஜோ டெய்லர், ஓமர்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பிளேக் ஹட்சன் ஆகியோரையும் நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசியுள்ளார்.
இந்த சந்திப்புகளில் இந்தியாவின் உட்கட்டமைப்பு துறையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக, நாட்டின் வளர்ச்சியுடன் உருவாகி வரும் புதிய முதலீட்டு வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு கனடாவைச் சேர்ந்த நிதி நிறுவனங்கள் தங்களது முதலீடுகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவின் காப்பீடு, உட்கட்டமைப்பு மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரத் துறைகளில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், கனடா நிதி நிறுவனங்களுடனான நிர்மலா சீதாராமனின் சந்திப்புகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
காப்பீட்டுத் துறையில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த வாய்ப்புகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே மத்திய அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் வெடித்தது வர்த்தகப் போர்! கனடா பொருட்களுக்கு 50% வரி! அமெரிக்க அதிபர் டிரம்புக்கு மார்க் கார்னி பதிலடி!