முடிவுக்கு வருகிறது 20 ஆண்டு மாநில அரசியல் பயணம்! நிதிஷ்குமார் சகாப்தம் ஓவர்! எம்.பியாக இன்று பதவியேற்பு!
'பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார், வரும் 14ம் தேதி பதவியை ராஜினாமா செய்வார்' என, எதிர்பார்க்கப்படுகிறது.
பீஹார் அரசியலில் பெரும் மாற்றம் நிகழவுள்ளது. ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) தலைவரும், மாநில முதல்வருமான நிதிஷ் குமார், வரும் 14-ம் தேதி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். இன்று (ஏப்ரல் 10) ராஜ்யசபா உறுப்பினராக பதவியேற்கும் அவர், அதன் பிறகு பீஹார் அரசியலில் இருந்து விலகி டெல்லியை நோக்கி பயணிக்கத் தயாராகி வருகிறார்.
கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற பீஹார் சட்டசபைத் தேர்தலில், ஜேடியு - பாஜக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றது. அந்தத் தேர்தலில் பாஜக அதிக இடங்களைப் பெற்றாலும், நிதிஷ் குமாரே முதல்வராகப் பொறுப்பேற்றார்.
எனினும், சமீப காலமாக பாஜக தலைமையில் ஆட்சி அமையும் என்கிற பேச்சு அரசியல் வட்டாரத்தில் எழுந்தது. இதை உறுதிப்படுத்தும் வகையில், மார்ச் மாதம் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில் நிதிஷ் குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதையும் படிங்க: 10 முறை தொடர் முதல்வர்?! ராஜ்யசபா எம்.பி தேர்தல்!! எம்.எல்.சி பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்குமார்!
இந்த முடிவு அவரது கட்சி ஆதரவாளர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. “எம்.எல்.ஏ., எம்.எல்.சி., லோக்சபா உறுப்பினர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்துவிட்டேன். ராஜ்யசபா உறுப்பினராக இதுவரை இல்லை. எனவே டெல்லி அரசியலை நோக்கி செல்ல விரும்புகிறேன்” என நிதிஷ் குமார் விளக்கம் அளித்தார்.
நேற்று பாட்னாவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட அவர், இன்று ராஜ்யசபா உறுப்பினராக பதவியேற்கிறார். இதனால், அவரது 20 ஆண்டுகளுக்கும் மேலான பீஹார் மாநில அரசியல் பயணம் முடிவுக்கு வருகிறது. முதல்வர் பதவியில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என பாஜக மேலிடத்துக்கு நிதிஷ் குமார் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, தற்போதைய துணை முதல்வரும், பாஜகவின் மூத்த தலைவருமான சாம்ராட் சவுத்ரியை அடுத்த முதல்வராக நியமிக்க அவர் விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, வரும் 15-ம் தேதி பதவியேற்பு விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நிதிஷ் குமார் பீஹாரின் நீண்டகால முதல்வராக இருந்து, மாநிலத்தின் வளர்ச்சிக்கு பங்களித்தவர் என அறியப்படுகிறார். அவரது விலகல், பீஹார் அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக - ஜேடியு கூட்டணி தொடரும் எனினும், தலைமை மாற்றம் மாநில அரசியலை பாதிக்கும் என்கிற கருத்துகளும் எழுந்துள்ளன.
இதையும் படிங்க: 10 முறை தொடர் முதல்வர்?! ராஜ்யசபா எம்.பி தேர்தல்!! எம்.எல்.சி பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்குமார்!