ரூ.100 கோடி பழனி கோவில் நிலம் ரூ.2 கோடிக்கு பதிவு.! பின்னணியில் சென்னை உயரதிகாரிகள்? பரபரப்பு விசாரணை!
பழனியில், 100 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலம் அவசர அவசரமாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், சார் - பதிவாளர் பின்னணியில் இருந்து செயல்பட்ட சென்னை உயரதிகாரிகள் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள 1.40 ஏக்கர் நிலம் வெறும் ரூ.2 கோடிக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகார், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் சார்-பதிவாளர் மட்டுமல்லாமல், சென்னை பதிவுத்துறை உயரதிகாரிகளின் பங்கும் இருந்ததா என்ற கோணத்தில் தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
1888-ஆம் ஆண்டு பக்தர் ஒருவர் கோவில் மடத்திற்கு தானமாக வழங்கிய இந்த நிலத்தை, தனியார் சிலர் பல ஆண்டுகளாக விற்க முயன்றதாக கூறப்படுகிறது. அறநிலையத்துறையின் தலையீட்டால் அந்த முயற்சிகள் தடுக்கப்பட்ட நிலையில், கடந்த ஜூலை 6-ஆம் தேதி அந்த நிலம் தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமானது எனக் கூறி மற்றொருவருக்கு விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியது. இதையடுத்து நீதிமன்றம் அந்த பத்திரப்பதிவை ரத்து செய்து, முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் குற்றப்புலனாய்வு நடத்தி வரும் நிலையில், பதிவுத்துறை கூடுதல் ஐ.ஜி. தலைமையிலான உயர்மட்ட குழுவும் தனியாக துறை ரீதியான விசாரணையை தொடங்கியுள்ளது. இதற்கிடையில், சம்பந்தப்பட்ட சார்-பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகியோர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பழனி முருகன் கோயில் ரூ.100 கோடி நில மோசடி... அதிகாரிகளிடம் சி.பி.சி.ஐ.டி கிடுக்கிப்பிடி! விசாரணையில் புதிய திருப்பம்!
விசாரணையின் முக்கிய அம்சமாக, பதிவு பணியில் இல்லாத ஒரு சார்-பதிவாளருக்கு திடீரென இணையதள ‘லாக்-இன்’ அனுமதி வழங்கப்பட்ட விதம் ஆய்வு செய்யப்படுகிறது. தற்காலிகமாக பழனி அலுவலகத்திற்கு மாற்றப்பட்ட ஜஸ்டின் மணிகண்டனுக்கு இந்த அனுமதியை யார் வழங்கினர், எந்த அதிகாரத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டது என்பதுதான் தற்போது முக்கிய கேள்வியாக மாறியுள்ளது. இதற்கான அனுமதி பொதுவாக மண்டல டி.ஐ.ஜி. நிலை அதிகாரிகள் மூலம் மட்டுமே வழங்கப்படும் என்பதால், மேல்மட்ட உத்தரவு இருந்ததா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
மேலும், இந்த பத்திரம் முதலில் மார்ச் மாதமே பதிவுக்கு தாக்கல் செய்யப்பட்டபோது, உரிமையியல் வழக்கு இருப்பதாக கூறி அப்போதைய சார்-பதிவாளர் பதிவு செய்ய மறுத்திருந்தார். பின்னர் நீதிமன்றம் மூன்று வாரங்களுக்குள் பரிசீலித்து பதிவு செய்ய உத்தரவிட்டிருந்தாலும், அந்த காலக்கெடு முடிந்த பிறகே ஜூலை 6-ஆம் தேதி அவசரமாக பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. நடைமுறைகளை மீறி இந்த பதிவு எப்படி நடந்தது என்பதையும் விசாரணை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
இதற்கிடையில், நிலத்தை விற்றதாக கூறப்படும் நபர்களில் ஒருவரான முருகதாஸ் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் முன் ஆஜராகி, தன்னிடம் உள்ள ஆவணங்களை சமர்ப்பித்து விளக்கம் அளித்துள்ளார். பழனி கோவில் நில மோசடி வழக்கில் அடுத்த கட்டமாக மேலும் சில அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: பழனி முருகன் கோவில் பத்திரப்பதிவு விவகாரம்... திமுக நிர்வாகி வீட்டிலும் சிபிசிஐடி சோதனை... பரபரப்பு..!!