×
 

பரந்தூர் விமான நிலையம் ரத்து! 13 கிராமங்களில் கொண்டாட்டம்! முதல்வர் விஜய்க்கு மக்கள் நன்றி!

சட்டசபையில் இன்று முதலமைச்சர் விஜய் வெளியிட்ட அறிவிப்பில், பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியானதும் பரந்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவிருந்த புதிய விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக முதலமைச்சர் விஜய் சட்டசபையில் அறிவித்த நிலையில், பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. நீண்ட காலமாக திட்டத்துக்கு எதிராக போராடி வந்த மக்கள், இந்த அறிவிப்பை வரவேற்று வருகின்றனர்.

சென்னையின் 2-வது விமான நிலையத்தை காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்க ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக சுமார் 5,300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த திட்டத்தால் விவசாய நிலங்கள் மற்றும் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார 13 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

குறிப்பாக ஏகனாபுரம் கிராம மக்கள், விமான நிலையத் திட்டம் அறிவிக்கப்பட்டது முதல் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். திட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. இதனால் பரந்தூர் விமான நிலைய விவகாரம் தமிழக அரசியலில் முக்கிய பிரச்சினையாக மாறியது.

இதையும் படிங்க: ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்! ‘அன்னபூரணி சூப்பர் 6’ திட்டத்தில் யாருக்கெல்லாம் கிடைக்கும்? முழு விவரம்!

தமிழக வெற்றிக் கழகம் அரசியல் களத்தில் நுழைந்த பின்னர், அக்கட்சியின் தலைவர் விஜய்யும் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் நேரடியாக பங்கேற்று, போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சந்தித்தார். அப்போது, திட்டத்தால் பாதிக்கப்படுவதாக கூறப்படும் மக்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சட்டசபையில் இன்று முதலமைச்சர் விஜய் வெளியிட்ட அறிவிப்பில், பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியானதும் பரந்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

நீண்ட காலமாக தங்களது நிலம் மற்றும் வாழ்வாதாரத்தை பாதுகாக்க போராடி வந்த நிலையில், அரசு திட்டத்தை கைவிடுவதாக அறிவித்திருப்பது தங்களுக்கு கிடைத்த வெற்றி என போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும், முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்தும், வாழ்த்துக்களை தெரிவித்தும் வருகின்றனர்.

இதையடுத்து பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களிலும் மக்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கி, கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட கால போராட்டத்துக்குப் பிறகு வெளியான இந்த அறிவிப்பு அப்பகுதி மக்களிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: லட்சக்கணக்கானோர் செய்த தவறால் கோடிக்கணக்கானோர் பாதிப்பு! மாற்றம் ஏமாற்றமானது! மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share