×
 

எரிபொருள் நெருக்கடி! மோடி ஆலோசனை! சமாளிப்பது எப்படி? அனைத்து மாநில முதல்வர்களுடன் இன்று மீட்டிங்!

தேர்தல் நடக்கவுள்ள மாநிலங்கள் தவிர, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

புதுடெல்லி: மேற்காசியாவில் தீவிரமடைந்து வரும் போர் பதற்றத்தால் இந்தியாவில் எரிபொருள், கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அச்சம் எழுந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கடந்த மாதம் 28-ம் தேதி முதல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடியாக ஈரான், வளைகுடா பகுதியில் அமெரிக்க நிலைகள் மீது தாக்குதலை அதிகரித்துள்ளது. 

இந்தப் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி பாதிக்கப்பட்டு, கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதியில் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் நாட்டில் பெட்ரோல், டீசல், எல்பிஜி உள்ளிட்ட எரிபொருள்களின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

இதையும் படிங்க: மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றம்! தாய்நாடு திரும்பும் மக்கள்! 4.26 லட்சம் பேர் இந்தியா திரும்பினர்!

இந்த சூழலை சமாளிக்க மத்திய அரசு ஏற்கெனவே பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நேற்று முன்தினம் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் உட்பட அனைவரும் ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தினர். இப்போது மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக பிரதமர் மோடி இன்று மாலை வீடியோ கான்பரன்ஸ் நடத்துகிறார்.

இந்த ஆலோசனையில், மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், மாநிலங்களின் தயார்நிலை, எரிபொருள் சேமிப்பு, விநியோகத் திட்டங்கள், அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்படும். மாநிலங்கள் தங்களது திட்டங்களை முன்வைக்கவும், ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அவற்றை சரி செய்யவும் இந்தக் கூட்டம் உதவும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

அடுத்த மாதம் தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், அசாம் மற்றும் புதுச்சேரியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த மாநிலங்களின் முதல்வர்கள் இந்த வீடியோ கான்பரன்ஸில் பங்கேற்க மாட்டார்கள். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், அந்த மாநிலங்களின் தலைமைச் செயலர்களுடன் மத்திய அமைச்சரவை செயலகம் தனியாக ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளது.

“தற்போதைய சூழலில் மத்திய-மாநில அரசுகள் ஒன்றுபட்டு ‘டீம் இந்தியா’ என்ற மனநிலையில் செயல்பட வேண்டும். இந்த ஆலோசனை அதற்கு உதவும்” என்று மத்திய அரசு வட்டாரங்கள் வலியுறுத்தியுள்ளன. இந்தியா தற்போது சுமார் 60 நாட்கள் எண்ணெய் இருப்பை வைத்திருப்பதாகவும், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், இன்றைய வீடியோ கான்பரன்ஸ் முடிவுகள் நாடு முழுவதும் எரிபொருள் பாதுகாப்பை உறுதி செய்ய உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: இஸ்ரேல் மீது ஏவுகணை மழை! ட்ரம்பை கேலி செய்யும் ஈரான்! அப்போ பேச்சுவார்த்தை சும்மாதானா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share