“அந்த வார்த்தை இருக்கக்கூடாது...” - பாயிண்ட்டை பிடித்த பாமக எம்.எல்.ஏ. ... வார்னிங் கொடுத்த சபாநாயகர்...!
அந்த ஒருமனதாக என்ற வார்த்தை அந்தத் தீர்மானத்தில் இருக்க வேண்டாம் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்
ஆங்கிலத்தில் பொதுவாக "Small is beautiful" என்று சொல்வார்கள். அதற்கு ஏற்பாடாகத்தான் நம்முடைய வரலாறும் தொடர்ச்சியாக இருந்து கொண்டிருக்கிறது.
உதாரணமாகச் சொல்ல வேண்டும் என்று சொன்னால், சுதந்திரம் அடைந்தபோது மெட்ராஸ் பிரசிடென்சியில் மொத்தம் 12 மாவட்டங்கள்தான் இருந்தன. காலப்போக்கில் நிர்வாக வசதிக்காக இன்றைக்கு அவை 38 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன.
இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால், இன்றைக்குக்கூட பரப்பளவில் பெரிதாக இருக்கக்கூடிய திண்டுக்கல், திருவண்ணாமலை, ஈரோடு, சேலம் போன்ற மாவட்டங்களைப் பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் இந்த அவையிலேயே பல்வேறு உறுப்பினர்களால் எழுப்பப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: “தென் மாநிலங்களுக்கு துரோகம்!” தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக–காங்கிரஸ் மோதல்!
உள்ளாட்சித் துறையை எடுத்துக்கொண்டாலும், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தொகுதி மறுவரையறை செய்யப்பட்டு வருகிறது.
அதுமட்டுமில்லாமல், மாநகராட்சிகளை எடுத்துக்கொண்டால், தமிழ்நாட்டில் முன்பு ஒரே ஒரு மாநகராட்சிதான் இருந்தது. அது சென்னை மாநகராட்சி மட்டும்தான். காலத்திற்கு ஏற்ப, முதற்கட்டமாக கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகியவை நகராட்சிகளாக இருந்த நிலையில், அவை தரம் உயர்த்தப்பட்டு மாநகராட்சிகளாக மாற்றப்பட்டன. அதற்குப் பிறகு திருச்சி, சேலம், நெல்லை என ஆறு மாநகராட்சிகளாக உயர்ந்தன. படிப்படியாக, இன்றைக்கு தமிழ்நாட்டில் 25 மாநகராட்சிகள் உள்ளன.
அதிலும் குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்று சொன்னால், ஒரே மாவட்டத்தில் இரண்டு மாநகராட்சிகள்கூட இருக்கின்றன. கோயம்புத்தூர், தஞ்சாவூர், கும்பகோணம் போன்றவை இதற்கு உதாரணமாக இருக்கின்றன. இவையெல்லாம் நிர்வாகத்திற்காகப் பிரிக்கப்பட்டு வருகின்றன.
அரசியல் கட்சிகளை எடுத்துக்கொண்டால்கூட, கடந்த காலங்களில் மிகப்பெரிய கட்சிகளாகச் சொல்லக்கூடிய திமுகவும், அதிமுகவும் தங்களுடைய கட்சி நிர்வாகத்திற்காக ஒரு வருவாய் மாவட்டத்திற்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற அடிப்படையில் வைத்திருந்தார்கள். அதற்குப் பிறகு காலப்போக்கில் ஒரு வருவாய் மாவட்டத்திற்கு இரண்டு மாவட்டச் செயலாளர்களாக வைத்தார்கள். அதன்பிறகு கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, தென்கிழக்கு முதல் வடமேற்கு வரை இன்றைக்கு வந்துவிட்டது. மத்திய மாவட்டங்கள்கூட வந்துவிட்டன.
இதைவிட இன்னும் அதிகமாகச் சொல்ல வேண்டும் என்று சொன்னால், இன்றைக்கு தமிழ்நாட்டில் தனிப்பெரும் கட்சியாக, சிங்கிள் லார்ஜஸ்ட் பார்ட்டியாக இருந்து கொண்டிருப்பது தமிழக வெற்றி கழகம்.
அப்படித் தமிழக வெற்றி கழகத்தை எடுத்துக்கொண்டால்கூட, ஒரு தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற அடிப்படையில் வைத்துக்கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலை உள்ளது.
இந்தியாவின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை தற்போது 97 கோடியே 98 லட்சமாக உள்ளது. கிட்டத்தட்ட 100 கோடி வாக்காளர்களை நெருங்கிக் கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில், இப்போது 543 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன.
இதை அளவீடாக எடுத்துப் பார்த்தால், சராசரியாக ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு 18 லட்சம் வாக்காளர்கள் வரை உள்ளனர். மக்கள் தொகையை எடுத்துக்கொண்டால், அது சுமார் 20 லட்சமாக இருக்கும்.
தமிழ்நாட்டைப் பார்த்தால், தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5 கோடியே 73 லட்சமாக உள்ளது. கிட்டத்தட்ட 6 கோடி வாக்காளர்களை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.
இதை கணக்கில் எடுத்துப் பார்த்தால், 39 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. அந்த 39 தொகுதிகளை எடுத்துக்கொண்டால், ஒரு தொகுதிக்கு சுமார் 14 லட்சம் முதல் 18 லட்சம் வரை வாக்காளர்கள் உள்ளனர்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நான் ஆரணி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவன். அந்தத் தொகுதியில் சுமார் 15 லட்சம் வாக்காளர்களும், கிட்டத்தட்ட 17 லட்சம் மக்கள் தொகையும் இருக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது.
இப்போது உலக நாடுகளை எடுத்துக்கொண்டால்கூட, ஐக்கிய நாடுகள் சபையில் அங்கீகரிக்கப்பட்ட நாடுகள் 195 உள்ளன. அங்கீகரிக்கப்படாத நாடுகளையும் சேர்த்தால் சுமார் 230 நாடுகள் உள்ளன.
இந்த நாடுகளின் மக்கள் தொகையையும், நம்முடைய நாடாளுமன்றத் தொகுதிகளில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையையும் கணக்கிட்டுப் பார்த்தால்கூட, ஆரணி நாடாளுமன்றத் தொகுதி உலகின் 43வது பெரிய நாட்டிற்கு சமமானதாக இருக்கிறது.
உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும் என்றால், ஐஸ்லாந்து, மாலத்தீவு, புரூனே, மால்டா, சைப்ரஸ் போன்ற நாடுகளின் மக்கள் தொகையைவிட ஒரு நாடாளுமன்றத் தொகுதியின் வாக்காளர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கக்கூடிய சூழ்நிலை இன்றைக்கு உள்ளது.
இதையெல்லாம் கருத்தில்கொண்டு, கடந்த காலங்களில் இந்தத் தீர்மானம் தொடர்பாகவும், இந்தச் சட்ட முன்வடிவை மத்திய அரசு கொண்டு வர முயற்சித்தபோதும், அன்றைக்கு ஆளுங்கட்சியாக இருந்த திமுக 2025ஆம் ஆண்டு ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியது.
அந்தக் கூட்டத்தில் திமுக பங்கேற்றது. அதிமுக பங்கேற்றது. பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக அக்கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார். தமிழக வெற்றி கழகமும் பங்கேற்றது. தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக பொதுச்செயலாளர், மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் மரியாதைக்குரிய அண்ணன் என். ஆனந்த் அவர்கள் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
காங்கிரஸ் கட்சியின் சார்பாக தற்போது இருக்கக்கூடிய அமைச்சர், மாண்புமிகு அமைச்சர் ராஜேஷ் அவர்கள் கலந்து கொண்டார். அதேபோல், காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை அவர்களும் கலந்து கொண்டார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை எடுத்துக்கொண்டால், அக்கட்சியின் பொதுச்செயலாளர், மரியாதைக்குரிய அண்ணன் தொல். திருமாவளவன் அவர்கள் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றார். அவருடைய நாடாளுமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய ரவிக்குமார் அவர்களும் பங்கேற்றார்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் பங்கேற்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக அப்போதைய தலைவர், மரியாதைக்குரிய தோழர் முத்தரசன் அவர்கள் பங்கேற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக அதன் தலைவர் மரியாதைக்குரிய தோழர் சண்முகம் அவர்கள் அன்றைக்கு பங்கேற்றார்.
அதுமட்டுமில்லாமல், இந்த அவையில் இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்களான மரியாதைக்குரிய சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா அவர்களும், மரியாதைக்குரிய சட்டமன்ற உறுப்பினர் தமிழ் முன்னஞ்சாரி அவர்களும், அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் மட்டுமல்லாமல், பல்வேறு இயக்கங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
அந்தக் கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் முன்வைத்த கோரிக்கை என்னவென்று சொன்னால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2026ஆம் ஆண்டு எடுக்கப்படுகின்ற மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை நடத்தப்படுமானால், பாட்டாளி மக்கள் கட்சி அதை கடுமையாக எதிர்க்கும் என்று அந்த நேரத்தில் பதிவு செய்தார்.
அதே நேரத்தில், இன்றைக்கு 543 தொகுதிகளில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் இருக்கின்றன. விகிதாச்சார அடிப்படையில் எடுத்துக்கொண்டால், இது 7.18 சதவீதமாக வருகிறது.
இந்த 7.18 சதவீத விகிதாச்சாரத்திற்குக் குறையாமல் ஒன்றிய அரசு தொகுதி மறுவரையறை செய்தால், அந்தத் தீர்மானத்தை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்கும் என்று அன்றைய கூட்டத்தில் பதிவு செய்யப்பட்டது.
இதையொட்டி அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைந்து அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அம்சங்கள் என்னவென்று சொன்னால், நாடாளுமன்றத்தில் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் பட்சத்தில், 1971ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கு இடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளதோ, அதே விகிதத்தில் தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்குத் தேவையான அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என ஒன்றிய அரசை இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் வலியுறுத்துகிறது.
தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் தற்போதைய பிரதிநிதித்துவமான 7.18 சதவீதத்தை எக்காரணம் கொண்டும் ஒன்றிய அரசு மாற்றம் செய்யக்கூடாது என்றும் இந்தக் கூட்டம் வலியுறுத்துகிறது என்று அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்குப் பிறகு, ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி இந்த மசோதா நாடாளுமன்றத்தில் வந்தபோது, தற்போதைய மாண்புமிகு உள்துறை அமைச்சர், மதிப்பிற்கும் மரியாதைக்குரிய ஐயா அமித்ஷா அவர்கள் நாடாளுமன்றத்திலேயே தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
"தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் உள்ளன. இது 7.18 சதவீதமாகும். இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, புதிய அவையில் மொத்தம் 816 தொகுதிகள் இருக்கும் நிலையில், தமிழ்நாட்டின் தொகுதிகளின் எண்ணிக்கை 59 ஆக உயரும். இது 7.23 சதவீதமாக இருக்கும். தமிழ்நாடு எந்த இழப்பையும் சந்திக்காது" என்று தெளிவாகத் தெரிவித்திருக்கிறார்.
அந்தந்த மாநிலங்களில் உள்ள விகிதாச்சாரத்தின் அடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் உயர்த்தி, அந்த 50 சதவீதமும் பெண்களுக்கு வழங்கப்படும் என்றும் நாடாளுமன்றத்திலேயே அவர் தெளிவாகத் தெரிவித்திருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல், பாரதப் பிரதமர் மரியாதைக்குரிய நரேந்திர மோடி அவர்கள் தேர்தல் நேரத்தில், குறிப்பாக 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி கேரளத்தில் தேர்தல் பிரசாரத்துக்கு வந்தபோது, இது குறித்து தெளிவான விளக்கத்தைத் தெரிவித்திருக்கிறார்.
அதாவது, மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தியிருக்கக்கூடிய தென் மாநிலங்களுக்கு எந்தப் பாதிப்பும் வருவதற்கு ஒன்றிய அரசு அனுமதிக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறெல்லாம் இருக்கும்பொழுது, இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால், அந்த வகையில் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால் 816 தொகுதிகள் என்றால் கூடுதலாக 273 தொகுதிகள் நாடாளுமன்றத்தில் அதிகரிக்கின்றன.
நீங்கள் சொல்வது போல 33 சதவீதம் என்று எடுத்துக்கொண்டால், 176 தொகுதிகள்தான் பெண்களுக்கு ஒதுக்கப்படும். ஆனால் இன்றைக்கு மத்திய அரசு, மாண்புமிகு உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் சொல்லியிருப்பதைப் போல நடைமுறைப்படுத்தினால், 273 தொகுதிகள் பெண்களுக்கு வழங்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
இன்னும் ஒருபடி சொல்ல வேண்டும் என்று சொன்னால், தமிழ்நாட்டில் 1962ஆம் ஆண்டில் 41 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். அதன்பிறகு 1972ஆம் ஆண்டில்தான் 39 ஆகக் குறைக்கப்பட்டது. இதெல்லாம் கடந்த கால வரலாறு.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தற்போது இருக்கக்கூடிய 39 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்து 33 சதவீதம் என்று கணக்கிட்டால், இன்றைக்கு 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் கூடுதலாக வருவார்கள். அவர்கள் பெண்களாக இருப்பார்கள்.
ஆனால், இந்தச் சட்டத்தின்படி தொகுதிகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் உயர்த்தி, அந்த இடங்களை பெண்களுக்கு வழங்கினால், 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாட்டிலிருந்து மகளிர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நாடாளுமன்றத்தை அலங்கரிப்பார்கள்.
இன்றைக்கு வெறும் ஐந்து பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அந்த அவையை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல், நம்முடைய சட்டமன்றத்தை எடுத்துக்கொண்டால்கூட, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சொன்னதுபோல, 234 தொகுதிகள் தற்போது இருக்கின்ற நிலையில் 33 சதவீத மசோதாவை நிறைவேற்றினால், கூடுதலாக 77 பெண் சட்டமன்ற உறுப்பினர்கள்தான் இந்த அவைக்கு கிடைப்பார்கள்.
ஆனால், கூடுதலாக தொகுதிகளை அதிகரித்து, அதனுடன் 33 சதவீதத்தை எடுத்துப் பார்த்தால், நமக்கு கூடுதலாக 117 பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைப்பார்கள்.
இன்றைக்கு இந்த அவையை எடுத்துக்கொண்டால், எங்களுடைய சட்டமன்றக் கட்சித் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள் உட்பட, தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த மாண்புமிகு அமைச்சர்கள் நான்கு பெண் உறுப்பினர்கள் உட்பட, முதலமைச்சர் சொல்வதுபோல் 23 பெண் உறுப்பினர்கள்தான் இன்றைக்கு இருக்கிறார்கள்.
இவ்வாறெல்லாம் இருக்கும்பொழுது, மகளிருடைய உரிமைக்கும், அவர்கள் அரசியல் அதிகாரம் பெறுவதற்கும் எதிராக நாம் எல்லாம் இருக்கப் போகிறோமா? ஒருபொழுதும் பாட்டாளி மக்கள் கட்சி அப்படி இந்த வேலையை செய்யாது. ஒருபொழுதும் பாட்டாளி மக்கள் கட்சி இப்படி செய்யாது.
மேலும் சொல்ல வேண்டும் என்று சொன்னால், எனக்கு முன்னால் பேசியவர்கள் சொன்னதுபோல, இது குறித்த எந்தச் சட்ட முன்வடிவோ, அதிகாரப்பூர்வ அறிவிப்போ இதுவரை வெளிவரவில்லை. எந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கும் வழங்கப்படவில்லை.
நேற்று நடைபெற்ற சட்டமன்ற நிகழ்வில்கூட, மாண்புமிகு வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினர் ஓசூர் விமான நிலையம் குறித்து கேட்டபோது, மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் அவர்கள் தெளிவாகச் சொன்னார்கள்: "ஆதாரம் இருந்தால் கொடுங்கள். ஆதாரத்தை வைத்து பேசுவோம். வாய்வழிச் செய்தியை வைத்து பேசுவது முறையாக இருக்காது" என்று மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் இதே அவையில் பதில் சொன்னார்.
ஆனால், இன்று செவிவழிச் செய்தியை வைத்து ஒரு தீர்மானத்தை நாம் இங்கே கொண்டு வந்திருக்கிறோம் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வளவு பெரிய தொகுதியை ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக நிர்வகிப்பது வாய்ப்பே கிடையாது. எனவே, இன்றைக்கு இந்தச் சட்டம் வருமா, வராதா என்றுகூட உறுதியாகத் தெரியாத சூழ்நிலையில், இந்த நேரத்தில் இந்தச் சட்டத்தைக் கொண்டு வருவதற்கான அவசியம் என்ன இருக்கிறது?
எனவே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உடனடியாக இந்தத் தீர்மானத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.
ஏன் என்று சொன்னால், நடந்து முடிந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நம்முடைய கட்சி உட்பட அனைத்து கட்சிகளும் சேர்ந்துதான் அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறோம்.
இன்றைக்கு இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றினோம் என்று சொன்னால், அன்று ஒரு நிலைப்பாடு, இன்று ஒரு நிலைப்பாடு என்று அரசியல் இரட்டை நிலைப்பாடு என்ற பொருளாகிவிடும்.
மேலும், இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுகிறீர்கள் என்று சொன்னால், இதில் "ஒருமனதாக" என்ற வாக்கியத்தை நீக்க வேண்டும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.
ஏனென்றால், பாட்டாளி மக்கள் கட்சி தனது கருத்தை மட்டும் சொல்லி முடிக்கவில்லை. எந்த வாக்கியத்தைப் போட்டு தீர்மானத்தை நிறைவேற்றுவது என்பதை நான் முடிவெடுப்பேன்.
ஏன் அந்த "ஒருமனதாக" என்ற வார்த்தை அந்தத் தீர்மானத்தில் இருக்க வேண்டாம் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்றால், இந்தத் தீர்மானத்தை பாட்டாளி மக்கள் கட்சி பெண்களின் உரிமைக்காகவும், அவர்கள் அரசியல் அதிகாரம் பெறுவதற்கும் எதிரானதாகப் பார்க்கிறது.
எனவே, இந்தத் தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. ஆதரிக்கவில்லை. ஆதரிக்கவில்லை என்று கூறி அமர்கிறேன்.
இதையும் படிங்க: ஸ்டாலின் vs காங்கிரஸ்: ‘எட்டப்பன்’ யார்? தமிழக அரசியலில் திடீர் மோதல்! பின்னணியில் என்ன நடக்கிறது?