தொடரும் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு..!! ஓட்டல்களில் எகிறும் உணவு விலை..!! தவிக்கும் சாமானிய மக்கள்..!!
ரூ.10-க்கு விற்பனையான பரோட்டா சில கடைகளில் ரூ.12.50 ஆகவும், மேலும் சில கடைகளில் ரூ.15 வரையிலும் அதிகரித்து உள்ளது.
வணிக சிலிண்டர் விநியோக நெருக்கடி தமிழக ஓட்டல் தொழிலை கடுமையாக பாதித்துள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாடு முழுவதும் வணிக உபயோக LPG சிலிண்டர்களின் சட்டபூர்வ விநியோகம் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ஓட்டல் உரிமையாளர்கள் கடும் சிரமத்தில் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நெருக்கடிக்கு மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் பதற்றமும், எரிபொருள் விநியோக சங்கிலியில் ஏற்பட்டுள்ள இடையூறும் முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
அரசு உத்தரவின்படி எண்ணெய் நிறுவனங்கள் வணிக சிலிண்டர்களை வழங்க மறுத்துவிட்டதால், பெரும்பாலான ஓட்டல்கள் தங்கள் இருப்புகளை நம்பி இயங்கி வருகின்றன. சில இடங்களில் ஓட்டல்கள் தற்காலிகமாக மூடப்படும் நிலைக்கும் தள்ளப்பட்டன.இந்தத் தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி கள்ளச் சந்தையில் வணிக சிலிண்டர்கள் தாராளமாக விற்கப்படுகின்றன.
சுமார் ரூ.2,200 என்ற இயல்பு விலையில் கிடைக்க வேண்டிய ஒரு சிலிண்டர், ஆரம்பத்தில் ரூ.3,000க்கு விற்கப்பட்டது. பின்னர் படிப்படியாக உயர்ந்து தற்போது ரூ.8,000 வரைக்கும் சென்றடைந்துள்ளது. இந்த அதிக விலையில் சிலிண்டர்களை வாங்கி செயல்பட வேண்டிய கட்டாயம் ஓட்டல் உரிமையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதன் நேரடி விளைவாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உணவு வகைகளின் விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காவலர்களுக்கு ஹேப்பி நியூஸ்..! தெலங்கானாவில் பிறந்தநாள், திருமண நாளுக்கு லீவ்..!
சாலையோர டீக்கடைகள் முதல் பெரிய ஓட்டல்கள் வரை அனைத்து இடங்களிலும் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. உதாரணமாக, ரூ.20க்கு விற்கப்பட்ட இரண்டு இட்லி இப்போது ரூ.30க்கு விற்கப்படுகிறது. ரூ.40 தோசை ரூ.60ஆகவும், ரூ.100 நெய் தோசை ரூ.130ஆகவும் உயர்ந்துள்ளது. ரூ.40-50க்கு கிடைத்த பொங்கல் ரூ.70 வரைக்கும், ஒரு செட் பூரி ரூ.50லிருந்து ரூ.80ஆகவும் மாறியுள்ளது. பரோட்டா ரூ.10லிருந்து ரூ.12.50 முதல் ரூ.15 வரைக்கும் விற்கப்படுகிறது.
சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணி, பிரைடு ரைஸ் உள்ளிட்ட அசைவ உணவுகளின் விலையும் ரூ.30 முதல் ரூ.50 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மாலை நேரங்களில் அதிகம் விற்கப்படும் சிக்கன் ரைஸ் ரூ.110லிருந்து ரூ.130-150க்கு சென்றுள்ளது. இட்லி, தோசை, சப்பாத்தி, கலவை சாதம், பிரியாணி உள்ளிட்ட அனைத்து உணவு வகைகளிலும் ரூ.5 முதல் ரூ.30 வரை அதிரடி உயர்வு காணப்படுகிறது. கோடை விடுமுறை காரணமாக குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் பொதுமக்கள் இந்த விலை உயர்வால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
“8 பேர் காலை உணவு சாப்பிட்டால் முன்பு ரூ.600 போதும். இப்போது ரூ.1,000 வரை செலவாகிறது” என ஒரு குடும்பத் தலைவர் வருத்தம் தெரிவித்தார். பெரிய ஓட்டல்களில் இது இரு மடங்கு அதிகமாகலாம். 2 அல்லது 3 நாட்கள் சுற்றுலாவுக்குச் செல்லும் குடும்பங்கள் ஒரு நாளைக்கு உணவுக்கு மட்டும் ரூ.3,000க்கு மேல் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஓட்டல் உரிமையாளர்களும், பொதுமக்களும் அரசு உடனடியாக வணிக சிலிண்டர் விநியோகத்தை சீர்படுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர். மத்திய மற்றும் மாநில அரசுகள் இந்த நெருக்கடிக்கு தீர்வு காண்பதன் மூலம் ஓட்டல் தொழிலையும், பொதுமக்களின் அன்றாட உணவுப் பழக்கத்தையும் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதையும் படிங்க: மத்திய கிழக்கில் அமைதி திரும்ப ரஷ்யா உதவும்!!! அமெரிக்கா, இஸ்ரேலுக்கு செக் வைத்த புடின்!! ஈரானுக்கு ஆதரவு!