மத்திய கிழக்கில் அமைதி திரும்ப ரஷ்யா உதவும்!!! அமெரிக்கா, இஸ்ரேலுக்கு செக் வைத்த புடின்!! ஈரானுக்கு ஆதரவு!
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதட்டத்தை தணித்து அமைதி திரும்ப உதவ தயாராக இருப்பதாக புடின் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றத்தை தணித்து, அமைதியை நிலைநாட்ட உதவ தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார். தற்போது இரு நாடுகளுக்கும் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சு இன்னும் தொடங்கவில்லை.
ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி பாகிஸ்தான் சென்றிருந்தாலும், அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தாமலேயே திரும்பினார். இதனால் பேச்சு முயற்சிகள் முட்டுக்கட்டையில் உள்ளன.
இந்நிலையில், அப்பாஸ் அராக்சி ரஷியா சென்று அதிபர் புதினை செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் சந்தித்தார். சந்திப்புக்குப் பிறகு புதின், மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தைத் தணித்து அமைதி திரும்ப உதவ ரஷியா தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாக்., நல்ல நண்பன்தான்!! ஆனா.. மத்தியஸ்தம் பண்ண தகுதி இருக்கா?! அமெரிக்காவுக்கு சாதகமாக பேசுவதாக புகார்!
ஈரான் அரசு தொலைக்காட்சி மேற்கோள் காட்டியபடி, புதின் கூறியதாவது: “மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தை தணித்து, அமைதியை மீட்டெடுக்க ரஷியா தனது அதிகாரத்திற்கு உட்பட்ட அனைத்து முயற்சிகளையும் செய்ய தயாராக உள்ளது. இந்த இக்கட்டான காலகட்டத்தை ஈரான் வெற்றிகரமாக கடந்து வரும் என்று நம்புகிறோம்” என்றார்.
ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி இது குறித்து கூறுகையில், “பிராந்தியப் பிரச்சினைகள் குறித்து ரஷியாவுடன் தொடர்ச்சியான இருதரப்பு கலந்துரையாடல் நடத்தி வருகிறோம். தற்போதைய நிலைமை மற்றும் போர் தொடர்பான விவகாரங்கள் குறித்து எங்கள் ரஷிய நண்பர்களுடன் விரிவாகப் பேச்சு நடத்தினோம்” என்று தெரிவித்தார்.
இதற்கு முன் அப்பாஸ் அராக்சி பாகிஸ்தான் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு, மத்திய கிழக்கு நிலவரம் குறித்து விவாதித்திருந்தார். இப்போது ரஷியாவுக்கு சென்றுள்ளது, ஈரான் அமைதிப் பேச்சுக்கான மாற்று வழிகளைத் தேடி வருவதைக் காட்டுகிறது.
ஹார்மூஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளதால் உலக அளவில் எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில், ரஷியாவின் இந்த மத்தியஸ்த ஏற்பாடு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. புதினின் அறிவிப்பு, அமெரிக்கா - ஈரான் இடையேயான பதற்றத்தை குறைக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் செல்லட்டும், திறந்து விடுங்கள்!! ஈரானுக்கு ஐ.நா வேண்டுகோள்!