×
 

சேகர்பாபுவின் ரவுடி அரசியல் இனி செல்லாது! தவெக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆவேசம்!

சென்னை துறைமுகம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள அக்கட்சியின் இணைப் பொதுச்செயலாளர், தோல்வி பயத்தினால் அமைச்சர் சேகர்பாபு ரவுடிகளை ஏவி விடுவதாகக் குற்றம் சாட்டினார்.

சென்னை பாரிமுனை பகுதியில் தேர்தல் தொடர்பான கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, காயமடைந்தவர்களை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தவெக நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர். கட்சியின் மாநில நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா மற்றும் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்துக் கேட்டறிந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சி.டி.ஆர். நிர்மல் குமார், அமைச்சர் சேகர்பாபு மீது மிகக் கடுமையானப் புகார்களை முன்வைத்தார்.

அவர் பேசுகையில், "துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் எங்கள் நிர்வாகிகள் தேர்தல் பணிக்காகச் சென்றபோது, அமைச்சர் சேகர்பாபு திட்டமிட்டு 100-க்கும் மேற்பட்ட திமுக ரவுடிகளை ஏவி கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளார். இதில் 6-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், இருவர் அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மனிதாபிமானமின்றி ஒரு கர்ப்பிணிப் பெண்ணையும் திமுகவினர் தாக்கியுள்ளனர். தோல்வி பயம் வந்துவிட்டாலே திமுகவினர் ரவுடி அரசியலை முன்னெடுப்பார்கள் என்பதற்கு இதுவே சாட்சி. சேகர்பாபு ஒவ்வொரு தவெக நிர்வாகியையும் தொலைபேசியில் அழைத்து அவதூறாகப் பேசி மிரட்டி வருகிறார். எங்கள் கட்சியின் நிர்வாகி சீமான் என்பவர் கடந்த மூன்று நாட்களாகக் காணவில்லை; இது குறித்துப் புகார் அளிக்கச் சென்றால் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ய மறுக்கின்றனர்" என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய நிர்மல் குமார், "சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்றுவிடும் என்று நினைப்பது போல, எங்கள் கட்சிக்கு மக்கள் மத்தியில் பெருகி வரும் ஆதரவைத் தடுக்க திமுகவினர் விசிலைப் பறிப்பதும், கொடிக்குத் தடை விதிப்பதும் என அராஜகத்தில் ஈடுபடுகிறார்கள். இந்த முறை துறைமுகம் தொகுதியில் சேகர்பாபு தோல்வியடைவது உறுதி. அவர் தோற்கும் வரை எங்கள் நிர்வாகிகள் ஓயாமல் களப்பணி ஆற்றுவார்கள். காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இந்தத் தாக்குதல் குறித்துச் சென்னை மாநகரக் காவல் ஆணையரிடம் புகார் அளிப்போம், அதன்பின்னும் நீதி கிடைக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம். 2026 தேர்தலில் தமிழகத்தில் இருந்து ரவுடி அரசியலை மக்கள் வேரோடு ஒழிப்பார்கள்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'கோச்சடையான்' தயாரிப்பாளருக்கு 6 மாத சிறை: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இதையும் படிங்க: குளுகுளுனு இருக்கப்போகுது சென்னை..!! பனிமூட்டம் தொடருமாம்..!! வானிலை அப்டேட்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share