தமிழகத்திற்கு பழனிசாமி! புதுச்சேரிக்கு ரங்கசாமி!! பாஜகவுக்கு கிடைத்த அடிமைகள் இவர்கள் - மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
முதல்வர் மு.க. ஸ்டாலின், புதுச்சேரியில் திராவிட மாடல் திட்டங்களை செயல்படுத்துவோம் என்று உறுதியளித்துள்ளார்.
புதுச்சேரியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரசாரம் செய்த முதல்வர் ஸ்டாலின், “புதுச்சேரி மாண்புகளை குழித்தோண்டி பாஜக புதைத்துள்ளது. பாஜகவினருக்கு தேவை என்றால் ஒரு மாநிலத்தையே உடைத்து புதிய மாநிலத்தை உருவாக்குவார்கள். அழகான புதுச்சேரியை அலங்கோலமாக்கியது தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிதான்” என்று குற்றம் சாட்டினார்.
மேலும், “பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி கிடைத்துள்ளார். 5 ஆண்டுகளாக முதல்வராக இருந்த ரங்கசாமி ஏன் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை? பிகார் முதல்வர் நிதீஷ் குமாரின் கதிதான் ரங்கசாமிக்கும் ஏற்படும். பதவிக்காக ரங்கசாமி மாறி மாறிச் செல்வார்” என்று விமர்சித்தார்.
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் திராவிட மாடல் திட்டங்களை புதுச்சேரியிலும் நிறைவேற்றுவோம் என்று உறுதியளித்த ஸ்டாலின், “புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும். புதுச்சேரி, காரைக்கால் மாநகராட்சிகளாக மாற்றப்படும்.
இதையும் படிங்க: டெல்லி ஓனர்கிட்ட பதில் வாங்கித்தர முடியுமா? இபிஎஸ், பாஜகவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நறுக் கேள்வி!
காரைக்கால் பகுதியை நெற்களஞ்சியமாக மாற்றி தானியக் கிடங்கு அமைக்கப்படும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரியில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி புதிய தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படும்” என்று வாக்குறுதி அளித்தார்.
“எனது குரல் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, புதுச்சேரிக்கும் ஒலிக்கும்” என்று கூறிய முதல்வர், புதுச்சேரி மக்களின் வாழ்வு மேம்படுத்த தி.மு.க. கூட்டணி உறுதியாக உள்ளதாகவும் வலியுறுத்தினார்.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் முதல்வர் ஸ்டாலினின் இந்தப் பிரசாரம், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திருமாவளவனுக்கு 8 சீட்.. தேமுதிக-வுக்கு 10 சீட்! திமுக-வை சாடிய அன்புமணி ராமதாஸ்!