ரூ.5 கோடி அபராதம் ரத்து! யமுனை விழா வழக்கில் வாழும் கலை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு வெற்றி!
யமுனை நதிக்கரையில் உலக கலாசார விழா நடத்தியதற்காக தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த ரூ. 5 கோடி அபராதத்தை ரத்து செய்துள்ளதுடன், அந்தத் தொகையை ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்புக்கு திருப்பித் தருமாறு சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டது.
புதுடெல்லி: டெல்லியில் யமுனை நதிக்கரையில் நடத்தப்பட்ட உலக கலாசார விழா தொடர்பாக ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்புக்கு விதிக்கப்பட்ட ரூ.5 கோடி அபராதத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ஏற்கனவே செலுத்தப்பட்ட தொகையை சம்பந்தப்பட்ட அமைப்புக்கு திருப்பித் தரவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் டில்லியில் யமுனை நதிக்கரையில் வாழும் கலை அமைப்பு சார்பில் உலக கலாசார விழா நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். விழா நடைபெற்றதன் காரணமாக யமுனை நதியின் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது.
இதனை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், சுற்றுச்சூழல் பாதிப்புக்காக வாழும் கலை அறக்கட்டளைக்கு ரூ.5 கோடி அபராதம் விதித்தது. தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி அந்தத் தொகையை அமைப்பு செலுத்தியது. எனினும், அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து வாழும் கலை அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இதையும் படிங்க: தயாநிதி மாறன் வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு! தொலைத்தொடர்பு செயலரை சாட்சியாக அழைக்க அனுமதி!
இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களும் நடைபெற்ற நிலையில், நீதிபதிகள் சதீஷ் சந்திர சர்மா மற்றும் என்.கே. சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. உலக கலாசார விழாவால் யமுனை நதியின் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டது என்பதை நிரூபிக்கும் போதுமான ஆதாரங்கள் இல்லை என நீதிபதிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த ரூ.5 கோடி அபராதத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், ஏற்கனவே செலுத்தப்பட்ட அபராதத் தொகையை வாழும் கலை அமைப்புக்கு திருப்பி வழங்குமாறு டில்லி மேம்பாட்டு ஆணையத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ள நிலையில், வாழும் கலை அமைப்புக்கு இது முக்கியமான சட்ட வெற்றியாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், யமுனை நதியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விவாதமும் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு! CBI, ED விசாரணை தீவிரம்! சுப்ரீம் கோர்ட்டில் ராகுல் மேல்முறையீடு!