×
 

இலவச திட்டங்கள் தொடர்பான வழக்கு!! தேர்தலுக்கு பிறகு விசாரிக்கலாம்!! சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

இலவச திட்டங்களை வாக்குறுதிகளாக அறிவிப்பதற்கு தடை விதிக்கக்கோரிய வழக்கின் விசாரணையை, தேர்தலுக்குப் பிறகு விசாரிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகம் உட்பட பல மாநிலங்களில் தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சிகள் இலவச திட்டங்களை வாக்குறுதியாக அறிவிப்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல மனு மீதான விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “தேர்தலுக்கு முன் இலவச திட்டங்களை அறிவிப்பதால் மாநில அரசுகளுக்கு நிதிச் சுமை ஏற்படுகிறது. இலவச திட்டங்களுக்கான நிதி ஆதாரத்தை கட்சிகள் வெளியிட வேண்டும். இலவச வாக்குறுதிகளுக்கு தடை விதிக்க மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜோய்மால்யா பக்சி அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி, “இலவச திட்டங்கள் பொருளாதாரத்தை பாதிக்கின்றன. இதை தடுக்க அவசர நடவடிக்கை தேவை” என்று வாதிட்டார்.

இதையும் படிங்க: சொத்துக்குவிப்பு வழக்கில் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனுக்கு சிக்கல்! இடம் பார்த்து ஆப்பு வைத்த பாஜக!

ஆனால் நீதிபதிகள் கூறியது: “கேரளா உட்பட பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போது இந்த வழக்கை அவசரமாக விசாரிப்பது தேர்தல் நடைமுறையை பாதிக்கும். எனவே தேர்தல் முடிந்த பிறகு இதை விசாரித்துக் கொள்ளலாம்.” இதனால் வழக்கு தள்ளிவைக்கப்பட்டது.

இந்த தீர்ப்பு தமிழகத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க. அரசின் மகளிர் உரிமைத் தொகை, இலவச பேருந்து பயணம் போன்ற திட்டங்கள் மீது அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றன. அதேநேரம், அதிமுகவும் சமீபத்தில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10,000 ரூபாய் உதவித் தொகை உள்ளிட்ட பல இலவச வாக்குறுதிகளை அறிவித்துள்ளது.

இலவச திட்டங்கள் தேர்தல் அரசியலின் பெரும் ஆயுதமாக மாறியுள்ள நிலையில், இவை பொருளாதார ரீதியாக நிலைத்திருக்கக்கூடியதா என்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். உச்ச நீதிமன்றம் இப்போது வழக்கை தள்ளிவைத்திருப்பதால், தேர்தல் முடிந்த பிறகு இந்த விவகாரம் மீண்டும் விவாதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அவதூறு! மாவட்ட எஸ்.பிக்கு பறந்த உத்தரவு! டிஜிபி விளக்கம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share