8 எம்.பி.,க்களுடன் பிரதமர் மோடியை சந்தித்த சுப்ரியா சுலே! பின்னணியில் பாஜவின் ‘மாஸ்டர் பிளான்’?
லோக்சபா தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான முக்கிய மசோதாக்கள் பார்லிமென்டில் முன்வைக்கப்பட உள்ள நிலையில், அவற்றுக்கு தேவையான ஆதரவை திரட்ட பாஜ முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
புதுடில்லி: மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. சுப்ரியா சுலே தலைமையில் எட்டு எம்.பி.,க்கள் பிரதமரை சந்தித்த நிலையில், இந்த சந்திப்புக்கு பின்னால் முக்கிய அரசியல் கணக்குகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சில நாட்களுக்கு முன்பு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் மற்றும் அவரது மகள் சுப்ரியா சுலே ஆகியோர் பிரதமர் மோடியை சந்தித்தனர். இந்த சந்திப்பு மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது சுப்ரியா சுலே தலைமையில் அக்கட்சியின் எட்டு எம்.பி.,க்கள் பிரதமரை சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பின்போது, மகாராஷ்டிராவில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு மத்திய அரசு நிவாரண நிதி வழங்க வேண்டும் என எம்.பி.,க்கள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், வறட்சி மற்றும் பேரிடர் நிவாரண நிதியை மாநிலத்திற்கு ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: செங்கோட்டையில் இந்த ஆண்டு மாறப்போகும் முக்கிய நடைமுறை! சுதந்திர தின நிகழ்ச்சியில் புதிய மாற்றம்!
மகாத்மா ஜோதிராவ் புலே, அவரது மனைவி சாவித்ரிபாய் புலே மற்றும் அன்னா பாவு சாத்தே ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும் பிரதமரிடம் வலியுறுத்தியதாக எம்.பி.,க்கள் தெரிவித்தனர்.
சந்திப்புக்கு பின்னர் எம்.பி., நிலேஷ் தன்யன்தேவ் லங்கே கூறுகையில், விவசாயிகளின் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என பிரதமரிடம் கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார். கனமழையால் பயிர்கள் சேதமடைந்த போதிலும், பல விவசாயிகளுக்கு இதுவரை உரிய இழப்பீடு கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார். மகாராஷ்டிராவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் புற்றுநோய் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்ததாக தெரிவித்தார்.
ஆனால், இந்த சந்திப்பின் பின்னணியில் வேறு அரசியல் கணக்கு இருப்பதாக டில்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. லோக்சபா தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான முக்கிய மசோதாக்கள் பார்லிமென்டில் முன்வைக்கப்பட உள்ள நிலையில், அவற்றுக்கு தேவையான ஆதரவை திரட்ட பாஜ முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார் தரப்பில் உள்ள எட்டு எம்.பி.,க்களின் ஆதரவை பெற பாஜ தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு பதிலாக, பிளவுபட்டுள்ள பவார் குடும்பம் மற்றும் கட்சியை மீண்டும் ஒன்றிணைக்க உதவ வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், மகாராஷ்டிர துணை முதல்வராக உள்ள சுனேத்ரா பவார், தங்கள் தரப்பின் தலைமையை ஏற்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் முன்வைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக இரு தரப்பினரிடமும் பாஜ சார்பில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதனால், பிரதமர் மோடி மற்றும் சுப்ரியா சுலே சந்திப்பு வெறும் மாநில பிரச்னைகள் தொடர்பானதா அல்லது மகாராஷ்டிர அரசியலில் புதிய கூட்டணிக்கான முன்னோட்டமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான தெளிவு அடுத்த சில நாட்களில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கிளாஸ்கோவில் இந்திய வரைபட சர்ச்சை! குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினாவை பாராட்டிய பிரதமர் மோடி!