நோட்டாவுக்கு கூட போடுங்க!! தயவுசெஞ்சு திமுகவுக்கு வேணாம்!! தமிழக விவசாய பாதுகாப்பு சங்கத்தினர் புது பிரசாரம்!
தேர்தலில், நோட்டாவுக்கு கூட ஓட்டு போடுங்கள்; ஆனால், தி.மு.க.,வுக்கு ஓட்டு போட வேண்டாம் என, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் பிரசாரம் செய்து வருகின்றனர்.
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு எதிராக கடும் எதிர்ப்பு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், பொதுமக்களிடம் ஒரு அதிரடி வேண்டுகோளை முன்வைத்துள்ளது. “நோட்டாவுக்கு கூட ஓட்டு போடுங்கள்; ஆனால், எக்காரணம் கொண்டும் திமுகவுக்கு ஓட்டு போட வேண்டாம்” என்று விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர்.
ஏற்கனவே திமுக அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்று அறிவித்திருந்த சங்கம், தற்போது துண்டுப் பிரசுரங்கள் வினியோகம் செய்து பொதுமக்களிடம் எதிர்ப்பு பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. துண்டுப் பிரசுரத்தில் திமுக அரசின் விவசாய எதிர்ப்பு நடவடிக்கைகளை பட்டியலிட்டு, ஏன் திமுகவை புறக்கணிக்க வேண்டும் என்ற காரணங்களை தெளிவாக விளக்கியுள்ளனர்.
சங்கத்தின் மாவட்ட செயலாளர் ரமேஷ் இது குறித்து கூறுகையில், “கடந்த தேர்தலில் திமுக அளித்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ‘விவசாயிகளின் ஒரு அடி நிலத்தை கூட எடுக்க மாட்டோம்’ என்று சொன்ன அரசு, திருவண்ணாமலை மாவட்டத்தில் 2,000 ஏக்கர் முப்போக நிலத்தை அபகரித்தது.
இதையும் படிங்க: ஒரு தொகுதியாச்சும் மாத்தி வாங்குங்க!! ஓயாத பிரச்னை!! பியூஸ் கோயலிடம் மல்லுக்கட்டும் பாஜக நிர்வாகிகள்!!!
தடுக்க முயன்ற விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்தது. இனாம் நில விவசாயிகளின் நிலங்களை பூஜ்ஜிய மதிப்பில் அபகரித்தது. விவசாயிகள் கேட்ட கள்ளு தடை நீக்கத்தை இன்னும் செய்யவில்லை. இப்படி பல கோரிக்கைகளை அரசு புறக்கணித்து, விவசாயிகளுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது” என்றார்.
இதனால் தான் திமுகவை முழுமையாக புறக்கணிக்க முடிவு செய்ததாகவும், “நோட்டாவுக்கு கூட ஓட்டு போடலாம், ஆனால் திமுகவுக்கு மட்டும் ஓட்டு போட வேண்டாம்” என்று வலியுறுத்தி வருவதாகவும் ரமேஷ் தெரிவித்தார். விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தற்போது பல்வேறு மாவட்டங்களில் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி, வீடு வீடாக சென்று இந்த செய்தியை மக்களிடம் கொண்டு சென்று வருகின்றனர்.
விவசாயிகளின் இந்த எதிர்ப்பு பிரசாரம் தமிழக அரசியல் களத்தில் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட விவசாயப் பகுதிகளில் இந்த பிரசாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக அரசின் விவசாயக் கொள்கையில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டும் இந்த நடவடிக்கை, தேர்தல் முடிவுகளில் விவசாய வாக்குகளின் பங்கை முக்கியமாக்கியுள்ளது.
தமிழகத்தில் விவசாயிகள் பெரும் எண்ணிக்கையில் உள்ள நிலையில், சங்கத்தின் இந்த அதிரடி அறிவிப்பு அனைத்து அரசியல் கட்சிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில் விவசாயிகளின் எதிர்ப்பு எந்த அளவுக்கு திமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதமாக உள்ளது.
இதையும் படிங்க: மயிலாப்பூரில் யார் போட்டி? தமிழிசையா? கே.டி.ராகவனா? பாஜகவில் நடக்கும் குடுமிப்பிடி சண்டை!