முதல்வர் விஜய் அதிரடி முடிவு! தனியாருக்கு மாறும் டாஸ்மாக்?! முதற்கட்ட பேச்சுவார்த்தை துவக்கம்!?
தமிழக அரசின் மது விற்பனையை தனியாரிடம் வழங்குவது குறித்து, அதிகாரிகள் தரப்பில் முதல்கட்ட பேச்சு தொடங்கி உள்ளது.
தமிழக அரசு மது விற்பனையை தனியாரிடம் வழங்கும் விவகாரத்தில் முதல்கட்ட பேச்சுகளை தொடங்கியுள்ளது. முதல்வர் விஜய் பொறுப்பேற்ற உடனேயே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய 717 மதுக் கடைகளை மூட உத்தரவிட்டார். அதன்படி அந்தக் கடைகள் மூடப்பட்ட நிலையில், தற்போது முழு மது விற்பனையையும் தனியார்மயமாக்கும் யோசனை ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
தலைமைச் செயலக உயர் அதிகாரிகள் சிலர் கூறியதாவது: தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் தான் முழு மது விற்பனையும் நடைபெறுகிறது. ஒவ்வொரு மாதமும் சராசரியாக 50 லட்சம் பெட்டி மது வகைகளும், 35 லட்சம் பெட்டி பீர் வகைகளும் விற்பனையாகின்றன. எந்த மது அதிகம் விற்பனையாகிறதோ அதை அதிக அளவில் கொள்முதல் செய்யும் நடைமுறை உள்ளது. இதனால் மது உற்பத்தி நிறுவனங்கள் டாஸ்மாக் ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்து, தங்கள் பொருட்களை அதிகம் விற்கச் செய்யும் 'கவுன்டர் சேல்ஸ்' முறை நிலவுவதாகக் கூறப்படுகிறது.
டாஸ்மாக் மூலம் மது உற்பத்தி முதல் விற்பனை வரை அனைத்து நிலைகளிலும் ஊழல் இருப்பதாக அதிகாரிகள் ஒப்புக்கொள்கின்றனர். இந்த சிண்டிகேட் முறையை உடைப்பது எளிதல்ல என்பதால், அண்டை மாநிலங்களைப் போல் மது விற்பனையை தனியார்மயமாக்க அரசு தயாராகி வருவதாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: பார்த்திபனின் புதிய யோசனை! டாஸ்மாக் கடையை சுடுகாட்டில் வைக்க சொல்லி முதல்வரிடம் கோரிக்கை!
இது தொடர்பாக சமீபத்தில் நடைபெற்ற உயர் மட்ட கூட்டத்தில் டாஸ்மாக், உள்துறை, நிதி, மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அதிகாரிகள், முதல்வர் அலுவலக அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் ஐந்து முக்கிய முன்னெடுப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் தற்போது 11 மது உற்பத்தி நிறுவனங்களும், 5 பீர் உற்பத்தி நிறுவனங்களும் செயல்படுகின்றன. இந்த சந்தையை பெரிதாக்கி, பல மாநிலங்கள் மற்றும் நாடுகளின் மதுவகைகளை அனுமதிக்கவும், வரி குறைப்பு செய்யவும், போலி மதுவை ஒழிக்கவும், கொள்முதல் முதல் விற்பனை வரை ஊழலை ஒழித்து வருவாயை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
எனினும், மது விற்பனையை தனியார்மயமாக்கினால் அரசுக்கு எதிராக அதிருப்தி எழும் என்பதால், “மதுவை அரசே விற்பது சரியல்ல” என முதல்வர் விஜய் பொதுமக்களிடம் தெளிவாக பேச வேண்டும் என அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். இறுதி முடிவு முதல்வருடன் கலந்தாலோசித்த பிறகே எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றம் நடைபெற்றால் தமிழகத்தில் மது விற்பனைத் துறையில் பெரும் புரட்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஸ்மார்ட் மீட்டர் திட்டம்! கைவிடுகிறது தவெக அரசு! ரூ.20,000 கோடி திட்டம் நிறுத்திவைக்க பரிசீலனை!