பிரபா ஒயின்ஸ் is Back... தனியார் மயமாகும் டாஸ்மாக்... அமைச்சர் சொன்னது என்ன?
டாஸ்மாக் கடைகள் தனியார்மயமாகுமா? வெளியான தகவலுக்கு அமைச்சர் விக்னேஷ் விளக்கம்
டாஸ்மாக் மதுபானக் கடைகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியானது. குறிப்பாக, முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, டாஸ்மாக் நிர்வாகத்தில் மாற்றங்களை மேற்கொள்ள முடிவு செய்திருப்பதாகவும், அதற்கான சட்டத் திருத்தங்கள் விரைவில் கொண்டுவரப்படலாம் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், அந்த தகவல்களுக்கு தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் விளக்கம் அளித்துள்ளார். டாஸ்மாக் கடைகளை தனியார்மயமாக்குவது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்றது உண்மைதான் என்றாலும், அதுகுறித்து இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 2003ஆம் ஆண்டு வரை மதுபான சில்லறை விற்பனை தனியார் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. பின்னர், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, மதுபான சில்லறை விற்பனையை அரசே நேரடியாக மேற்கொள்ளும் வகையில் டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தார். அதன் பின்னர் கடந்த 23 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் நிறுவனமே மதுபான சில்லறை விற்பனையை மேற்கொண்டு வருகிறது.
இதையும் படிங்க: #BREAKING ஃபோன் ஸ்விட்ச் ஆஃப்... டாஸ்மாக் மோசடி வழக்கில் திடுக் திருப்பம்... அடுத்த முக்கிய புள்ளி தலைமறைவு?
இந்நிலையில், டாஸ்மாக் மதுபான விற்பனையை மீண்டும் தனியார் வசம் ஒப்படைக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவின. தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சட்டத்தில் திருத்தம் செய்து, வரவிருக்கும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அதற்கான மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்றும் கூறப்பட்டது.
மேலும், முதல் கட்டமாக நகர்ப்புறங்களில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்து, பின்னர் படிப்படியாக மாநிலம் முழுவதும் இந்த நடைமுறையை விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால், பார்களுடன் சேர்த்து சுமார் 2,500 டாஸ்மாக் கடைகள் தனியார் நிர்வாகத்தின் கீழ் செல்லும் என்றும் கூறப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து அமைச்சர் விக்னேஷ் கூறுகையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்த பல்வேறு யோசனைகள் மற்றும் சீர்திருத்தங்கள் குறித்து தொடர்ந்து ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
அந்த ஆலோசனைகளில் டாஸ்மாக் நிர்வாகத்தை தனியார்மயமாக்குவது தொடர்பான கருத்துகளும் இடம்பெற்றதாக அவர் கூறினார். ஆனால், அதுதொடர்பாக அரசால் எந்தவித உறுதியான அல்லது இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
மேலும், கடந்த கால நிர்வாகத்தின் காரணமாக துறையில் ஏற்பட்டுள்ள சவால்களை சரிசெய்ய பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவற்றின் ஒரு பகுதியாக பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.
இதையும் படிங்க: #BREAKING: டாஸ்மாக் முறைகேடு.! செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின்..! கிரீன் சிக்னல் காட்டிய சுப்ரீம் கோர்ட்..!!