அகற்றப்படாத அரசியல் போஸ்டர்கள்... தாராபுரத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தும் அலட்சியம்...!
தாராபுரத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தும் அலட்சியம் – தாராபுரத்தில் அகற்றப்படாமல் இருக்கும் அரசியல் போஸ்டர்கள்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று மாலை முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, தொகுதி முழுவதும் அரசியல் கட்சிகள் சார்ந்த போஸ்டர்கள், பேனர்கள், விளம்பரப் பதாகைகள் மற்றும் சுவர் விளம்பரங்கள் உள்ளிட்ட அரசியல் சார்ந்த விளம்பரங்களை உடனடியாக அகற்ற வேண்டும்.
ஆனால், தேர்தல் அறிவிப்பு வெளியாகி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையிலும், தாராபுரம் நகரின் பல்வேறு முக்கிய பகுதிகளில் அரசியல் சார்ந்த போஸ்டர்கள் மற்றும் விளம்பரங்கள் இன்னும் அகற்றப்படாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதையும் படிங்க: இடைத்தேர்தலில் களமிறங்கும் நாதக..! வேட்பாளர் பட்டியலை வெளியிடும் சீமான்..!! எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!
குறிப்பாக, நகராட்சி அலுவலகம் தாலுக்கா அலுவலகம் சாலை, தாராபுரம் பேருந்து நிலையம்,
பெரிய கடைவீதி, சின்ன கடைவீதி, ஐந்து சாலை சந்திப்பு உள்ளிட்ட தாராபுரத்தின் முக்கிய பகுதிகளில் அரசியல் சார்ந்த போஸ்டர்கள் மற்றும் விளம்பரங்கள் தொடர்ந்து காணப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
தேர்தல் விதிமுறைகளை அமல்படுத்த வேண்டிய அரசு அதிகாரிகள் மற்றும் நகராட்சி நிர்வாகம், இதனை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக செயல்படுவதாகவும் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகும் அரசியல் விளம்பரங்கள் அகற்றப்படாமல் இருப்பது ஏன்? அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்காதது எதனால்? என்ற கேள்விகளும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மேலும், தேர்தல் விதிமுறைகள் அனைவருக்கும் சமமாகவும் பாரபட்சமின்றியும் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும், தாராபுரம் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அனைத்து அரசியல் போஸ்டர்கள், பேனர்கள் மற்றும் விளம்பரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தும் தாராபுரத்தில் தொடரும் இந்த அலட்சியத்திற்கு அதிகாரிகள் எப்போது முற்றுப்புள்ளி வைக்கப் போகிறார்கள்? என்பதே தற்போது பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.
இதையும் படிங்க: கூட்டணி மூலம் உள்ளாட்சி தேர்தலை சந்திக்கும் நிலை... கிருஷ்ணகிரியில் ஜி கே வாசன் பேட்டி..!!