தனிக்கட்சி தொடங்க முடிவெடுத்த அண்ணாமலை...? - தேனி முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு...!
அண்ணாமலை கட்சியிலிருந்து விலகுவதாக வந்த தகவலை தொடர்ந்து அவர் தனது முடிவை மாற்ற வேண்டும் என பாஜக சார்பில் தேனியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்.
தமிழ்நாடு பாஜகவில் நீண்டகாலமாகக் குமுறிக் கொண்டிருந்த உட்கட்சி மோதல் இப்போது டெல்லி உயர்மட்டத்தை எட்டியுள்ளது. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கே. அண்ணாமலை தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்த பின்னர், அவரைத் தக்கவைக்க அல்லது சமரசம் செய்ய கட்சி மேலிடம் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த விவகாரம் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலை தொடர்ந்து பாஜகவில் இருப்பாரா அல்லது புதிய அரசியல் பாதையைத் தேர்வு செய்வாரா என்பதே தற்போதைய பெரும் கேள்வியாக உள்ளது.
2020-ம் ஆண்டு தமிழக பாஜக தலைவராகப் பொறுப்பேற்ற அண்ணாமலை, தனது அதிரடி அணுகுமுறை மூலம் இளைஞர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரிடையே வேகமான செல்வாக்கைப் பெற்றார். 'என் மண் என் மக்கள்' யாத்திரை உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் கட்சியை இளமையாக்கினார். இருப்பினும், 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 27 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. 2026 தேர்தலில் வாக்கு சதவீதம் 11 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாகக் குறைந்தது. இதற்கு கூட்டணி முடிவு, தலைமைப் பொறுப்பு மாற்றம் உள்ளிட்டவற்றை அண்ணாமலை ஆதரவாளர்கள் காரணமாகச் சுட்டிக்காட்டினர்.
2025-ல் நயினார் நாகேந்திரன் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அண்ணாமலை ஓரங்கட்டப்பட்டதாக உணர்ந்தார். தேர்தல் வாய்ப்பு மறுப்பு, மூத்த தலைவர்களின் திட்டமிட்ட ஒதுக்குதல், நிர்வாக சீர்கேடுகள் உள்ளிட்ட புகார்களுடன் ஐந்து பக்கங்கள் கொண்ட விரிவான மனுவை டெல்லியில் சமர்ப்பித்தார். அதில் அதிமுக கூட்டணி உள்ளிட்ட முடிவுகளை விமர்சித்ததுடன், மத்திய அமைச்சர் உள்ளிட்டோர் மீதான புகார்களையும் ஆதாரங்களுடன் முன்வைத்ததாகத் தெரிகிறது. டெல்லி செல்லும் முன்பு தனது காரில் இருந்த கட்சிக் கொடியை அகற்றிய செயலும் பெரும் ஊகங்களுக்கு வித்திட்டது. மேலும் டெல்லியில் முக்கிய பாஜக தலைவர்களைச் சந்தித்த அண்ணாமலை, பாஜகவில் இருந்து விலகுவதாக கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சமாதானப்படுத்த போராடும் பாஜக தலைவர்கள்..!! மனம் இறங்கி வருவாரா அண்ணாமலை..??
மேலும் அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்க உள்ளதாக தகவல் வெளியானது. இதற்கிடையே நேற்று டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து கட்சியில் இருந்து விலகுவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக பாஜக கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டது.
இந்நிலையில் இன்று தினம் அண்ணாமலை பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் தனது முடிவை மாற்ற வேண்டும் என ஆங்கிலத்தில் "Think again" என்கிற வாசகங்களுடன் தேனியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது
தேனியில் முக்கிய பகுதிகளான பழைய பேருந்து நிலையம், நேரு சிலை மற்றும் பெரியகுளம் ஆகிய பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. பாஜக சமூக ஊடகப்பிரிவு மாநிலச் செயலாளர் வசந்த் பாலாஜி புகைப்படத்துடன் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரில் "Think again" என்கிற ஆங்கில புத்தகத்தை கொடுப்பது போன்று புகைப்படம் இடம் பெற்றுள்ளது
பாஜகவில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கப் போவதாக தகவல்கள் வெளிவரும் நிலையில் அண்ணாமலை தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற வகையில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அமித்ஷாவுடன் அண்ணாமலை சந்திப்பு! பாஜகவில் இருந்து விலகியது ஏன்? காரணங்களை பட்டியலிட்டதால் பரபரப்பு!