பிளாஸ்டிக் சேரா? வேணாவே வேணாம்பா!! பதறிப்போய் திருமாவளவனை தடுத்த அமைச்சர்!!
அமைச்சர் அன்பரசன் அலுவலகத்தில், பிளாஸ்டிக் நாற்காலியில் அமர முயன்ற வி.சி.க., தலைவர் திருமாவளவனை, அமைச்சர் அன்பரசன் தடுத்து வேறு நாற்காலியில் அமர வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் அமைச்சர் அன்பரசன் அலுவலகத்துக்கு வந்த வி.சி.க. தலைவர் திருமாவளவனுக்கு பிளாஸ்டிக் நாற்காலியில் அமர அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்போரூர் உள்ளிட்ட தொகுதிகளில் பிரசாரம் செய்து கொண்டிருந்த திருமாவளவன், திருக்கழுக்குன்றத்தில் அமைச்சர் அன்பரசன் அலுவலகத்துக்கு சென்றார். அவரை அமைச்சர் வரவேற்றார். உள் அறையில் இருந்து ‘ஒயர்’ நாற்காலி எடுத்து வரப்பட்டது. ஆனால் திருமாவளவன் அங்கிருந்த பிளாஸ்டிக் நாற்காலியில் அமர முயன்றார். இதைக் கண்ட அமைச்சர் அன்பரசன் உடனடியாக தடுத்து, “நீங்கள் இதில் அமருங்கள்” என்று ஒயர் நாற்காலியை சுட்டிக்காட்டினார்.
திருமாவளவன் மறுத்து, “நீங்கள் அமருங்கள்” என்று கூறி மீண்டும் பிளாஸ்டிக் நாற்காலியை நோக்கி சென்றார். அப்போது அமைச்சர் அவரைத் தடுத்து நிறுத்தி, உள்ளே இருந்த தனது சொந்த குஷன் நாற்காலியை எடுத்து வரச் சொல்லி அதில் அமர்ந்தார். இறுதியில் திருமாவளவன் ஒயர் நாற்காலியில் அமர்ந்தார்.
இதையும் படிங்க: ச்சீ..ச்சீ... அந்த இரண்டு கட்சி இருக்குற இடத்துக்கு கூட போகமாட்டேன்... மறைமுகமாக விளாசிய திருமா...!
இதேபோன்ற சம்பவம் ஏற்கெனவே அமைச்சர் ராஜ கண்ணப்பன் அலுவலகத்திலும் நடந்திருந்தது. அப்போது திருமாவளவன் பிளாஸ்டிக் நாற்காலியில் அமர வைக்கப்பட்டது வி.சி.க.வினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. ஜாதிய உணர்வுடன் நடந்து கொள்வதாக தி.மு.க. மீது குற்றச்சாட்டும் எழுந்தது.
இந்த முறை அத்தகைய சர்ச்சை ஏற்படாமல் தடுக்கவே அமைச்சர் அன்பரசன் திருமாவளவனை பிளாஸ்டிக் நாற்காலியில் அமர அனுமதிக்கவில்லை என்று வி.சி.க.வினர் தெரிவித்தனர். இருப்பினும், இந்தச் சம்பவம் தி.மு.க. - வி.சி.க. கூட்டணிக்குள் சிறு விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு இடையேயான சிறு சிறு சம்பவங்களும் பெரும் விவாதத்துக்கு உள்ளாகின்றன. திருமாவளவன் - அன்பரசன் சந்திப்பின்போது நடந்த நாற்காலி சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இரு தரப்பும் இந்த விவகாரத்தை மிகைப்படுத்தாமல் கையாள வேண்டும் என்று அரசியல் பார்வையாளர்கள் வலியுறுத்துகின்றனர். தேர்தல் நேரத்தில் கூட்டணி ஒற்றுமை மிக முக்கியம் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதையும் படிங்க: திமுகவை வீழ்த்தி விஜய் முதலமைச்சர் ஆகிடுவாரா..? பெரம்பூர் வெற்றியே கேள்விகுறி தான்..! திருமா. விமர்சனம்..!