பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு! மிசோரம் தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!
சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற மிசோரம் மற்றும் அருணாச்சலப் பிரதேச மாநில தின விழாவில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என். ரவி, பெண்களின் பாதுகாப்பில் தமிழ்நாடு முதன்மையான மாநிலமாகத் திகழ்வதாகப் பாராட்டியுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் (மக்கள் மாளிகை), மிசோரம் மற்றும் அருணாச்சலப் பிரதேச மாநிலங்கள் உருவான தின விழா இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், தமிழ்நாட்டில் வசிக்கும் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆற்றிய உரையின் கூறியதாவது, "இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட, தமிழ்நாட்டில் தங்களது பெண் பிள்ளைகளுக்குப் படிக்க இடம் கிடைத்தால், வடமாநிலப் பெற்றோர் மிகுந்த நிம்மதி அடைகிறார்கள். இந்த நிம்மதியும் பாதுகாப்பும் டெல்லியிலோ அல்லது இந்தியாவின் பிற பகுதிகளிலோ அவர்களுக்குக் கிடைப்பதில்லை" என்று ஆளுநர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
மற்ற மாநிலங்களில் பயிலும் மாணவிகளை அவர்களது பெற்றோர் இரவு நேரத்தில் வெளியே செல்ல அனுமதிக்கத் தயங்கும் நிலையில், தமிழ்நாட்டில் பயிலும் பிற மாநில மாணவர்கள் அச்சமின்றிச் சுதந்திரமாக நடமாடுவதைத் தங்களது பெற்றோர் அனுமதிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: டிபென்ஸ் மோடு மட்டும் போதாது... இனி அட்டாக் மோடுதான்! ஐடி அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி கட்டளை!
தமிழ் மக்கள் மிகுந்த விருந்தோம்பல் குணமுடையவர்களாகவும், அன்பானவர்களாகவும் இருக்கிறார்கள். 2000 ஆண்டுகள் பழமையான கலாச்சாரத்தை எவ்வித மாற்றமுமின்றி இன்றும் தமிழர்கள் பின்பற்றி வருவது வியக்கத்தக்கது. தமிழ்நாடு கல்வி மற்றும் முற்போக்கு வளர்ச்சியில் முதன்மையான மாநிலமாகத் திகழ்கிறது என்றார்.
மிசோரம், அருணாச்சலப் பிரதேசம் மட்டுமல்ல, இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்து மக்கள் வந்தாலும் தமிழ்நாட்டைத் தங்களது சொந்த வீடாகவே கருதுகிறார்கள். நிர்வாகத் தேவைகளுக்காக மாநிலங்கள் பிரிக்கப்பட்டாலும், நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒற்றுமையே நம் நாட்டின் அழகு என்று அவர் பேசினார்.
"பிற மாநிலங்களிலிருந்து வந்து இங்குப் பயிலும் மாணவர்களுக்குத் தங்களது வீட்டின் ஞாபகம் வந்தால், எப்போது வேண்டுமானாலும் இந்த 'மக்கள் பவனுக்கு' வரலாம்; என்னுடன் தேநீர் அருந்தலாம்" என மாணவர்களுக்கு அன்பான அழைப்பு விடுத்தார்.
மேலும், தனக்கு விமானப் பயணங்களை விட ரயில் பயணங்களே மிகவும் பிடிக்கும் என்றும், அதன் மூலமே இந்தியாவின் பன்முகத்தன்மையை முழுமையாக ரசிக்க முடியும் என்றும் அவர் தனது விருப்பத்தைப் பகிர்ந்துகொண்டார். மாநிலங்கள் உருவான தினத்தைக் கொண்டாடுவதன் மூலம் தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்த முடியும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையில் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: ஜெயலலிதா ஆசியோடு மீண்டும் ஸ்டாலின் ஆட்சி... உ.பி.க்களையே மிஞ்சிவிட்டாரய்யா... ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ தரமான சம்பவம்...!