×
 

தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் அலுவலக செலவு பல மடங்கு உயர்வு? அதிகாரிகள் மீது விழும் கூடுதல் சுமை!

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் அலுவலகங்களின் செலவுகள் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போதிய நிதி இல்லாததால் அதிகாரிகள் மீது கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர்கள் அலுவலகங்களின் அன்றாட செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதனை சமாளிப்பதில் துறை அதிகாரிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. போதிய அரசு நிதி ஒதுக்கப்படாததால், அலுவலக செலவுகளை நிர்வகிப்பதில் அதிகாரிகள் மீது கூடுதல் அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தலைமைச் செயலகத்தில் ஒவ்வொரு அமைச்சருக்கும் தனித்தனி அலுவலகங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அங்கு அமைச்சரின் உதவியாளர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இருப்பதுடன், தினமும் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் அமைச்சர்களை சந்திக்க வருவது வழக்கமாக உள்ளது. அவர்களுக்கு குடிநீர், டீ, காபி, சிற்றுண்டி உள்ளிட்ட அடிப்படை உபசரிப்புகள் வழங்கப்படுகின்றன.

அதிகாரிகள் கூறுவதன்படி, இந்த செலவுகளுக்காக அரசு தரப்பில் போதிய நிதி ஒதுக்கப்படுவதில்லை. இதனால், சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரிகளே அலுவலக செலவுகளை சமாளிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஒரு அமைச்சர் அலுவலகத்திற்கே மாதந்தோறும் ரூ.2 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை செலவாகும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: "ஆளுநர் ஒப்புதல் இனி தேவையில்லை... தமிழகத்தில் முதல்வர் விஜய்க்கு கூடுதல் அதிகாரம்; புதிய அரசாணை அமல்!"

கடந்த ஆட்சிக் காலத்தில் செலவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமைச்சர் அலுவலகங்களில் மதிய உணவு வழங்கும் நடைமுறை குறைக்கப்பட்டதாகவும், தற்போது அமைச்சர்களை சந்திக்க வருவோரின் எண்ணிக்கை அதிகரித்ததால் டீ, காபி, தண்ணீர் பாட்டில் மற்றும் உணவு செலவுகள் கணிசமாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் நாட்களில் அமைச்சர்கள் அலுவலகங்களில் கூட்டம் அதிகரிப்பதால், ஒவ்வொரு அலுவலகத்தின் செலவும் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை உயரக்கூடும் என அதிகாரிகள் கணித்துள்ளனர்.

இந்த கூடுதல் செலவுகளை ஈடுகட்ட துறை அதிகாரிகள் மீது மறைமுக அழுத்தம் உருவாகும் அபாயம் இருப்பதாகவும், இதுபோன்ற நிலை முறைகேடுகளுக்கு வழிவகுக்கக்கூடும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, அமைச்சர்கள் அலுவலக செலவுக்காக அரசு தனியாக நிதி ஒதுக்க வேண்டும் என்றும், தற்போதுள்ள டீ, காபி செலவுக்கான மாதாந்திர ஒதுக்கீடு போதுமானதல்ல என்பதால் அதை மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: திமுகவை சும்மா விடப் போறது இல்லை?! கடந்த ஆட்சிகால மணல் குவாரி முறைகேடுகள்! தூசி தட்டும் தவெக அரசு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share