×
 

கோவில் நிலங்கள் குறித்து அதிரடி உத்தரவு: ஜூனுக்குள் முழு அறிக்கை தாக்கல் செய்ய அமைச்சர் ரமேஷ் ஆர்டர்!

அறநிலையத்துறை கோவில்களுக்கு இனாமாக வழங்கப்பட்ட நிலங்கள் குறித்த விபரங்கள், ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்கள், நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் குறித்து ஜூனிற்குள் அறிக்கை தாக்கல் செய்ய அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.

அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களுக்கு இனாமாக வழங்கப்பட்ட நிலங்கள், ஆக்கிரமிப்பில் உள்ள சொத்துகள் மற்றும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பான முழுமையான விவரங்களை ஜூன் மாதத்திற்குள் தாக்கல் செய்ய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பு கோவில் நிர்வாகங்கள் மற்றும் துறை அதிகாரிகள் மத்தியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அறநிலையத்துறை அமைச்சராக அண்மையில் பொறுப்பேற்றுள்ள ரமேஷ், துறை உயர் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அந்தக் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களுக்கு சொந்தமான பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள், அவற்றின் குத்தகை விவரங்கள் மற்றும் நிர்வாக நிலைமைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது பல கோவில்களுக்கு இனாமாக வழங்கப்பட்ட நிலங்களில் கணிசமான பகுதி ஆக்கிரமிப்பில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இந்த நிலங்களை மீட்பது தொடர்பாக பல கோவில் நிர்வாகங்கள் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டது.

இதையும் படிங்க: அரசு நிறுவனங்களில் முதலீடு செய்த கோயில் நிதி!! பாதுகாப்பாக இருக்கும் என ஹைகோர்ட்டில் அரசு உத்தரவாதம்!

இதையடுத்து, இனாம் நிலங்கள் எவ்வளவு, ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் எவ்வளவு, அவற்றின் தற்போதைய நிலை என்ன, நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளின் விவரங்கள் என்ன என்பது குறித்த முழுமையான அறிக்கையை ஜூன் மாதத்திற்குள் சமர்ப்பிக்க அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், துறையின் சமீபத்திய நடவடிக்கை குறித்து கோவில் ஊழியர்கள் சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக இனாம் நிலங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு நிலங்கள் குறித்த விவரங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு அறநிலையத்துறையின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

ஆனால் தற்போது வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ஒவ்வொரு கோவிலும் பழைய பதிவேடுகளை ஆய்வு செய்து கையால் தொகுத்து அறிக்கை அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே டிஜிட்டல் வடிவில் உள்ள தகவல்களை மீண்டும் மேனுவலாக தயாரிக்க சொல்வது தேவையற்ற காலதாமதத்தையும் மனித ஆற்றல் வீணாவதையும் ஏற்படுத்தும் என ஊழியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

கோவில் சொத்துகள் பாதுகாப்பு மற்றும் நிர்வாக சீர்திருத்தம் தொடர்பாக அமைச்சர் ரமேஷ் தீவிர கவனம் செலுத்தி வரும் நிலையில், துறை அதிகாரிகளும் அதற்கேற்ற வகையில் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இதையும் படிங்க: தலைக்கேறிய மதுபோதை! வீடுபுகுந்து பாலியல் தொல்லை!! வடமாநில இளைஞரை அடித்தே கொன்ற மக்கள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share