ஆசிர்வாதம் வாங்குனேன்!! அதில் தப்பில்லையே!! தமிழரின் பண்பு என எடப்பாடி பழனிசாமி விளக்கம்!
''அ.தி.மு.க.,வில் பதவி, பொறுப்பு கிடைத்ததால், காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினேன்; அது தவறில்லை. ஆசிர்வாதம் வாங்குவது தமிழர்களின் பண்பு,'' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் இ.பி.எஸ்., கூறினார்.
அ.தி.மு.க., பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி, ராயபுரம் மற்றும் துறைமுகம் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து வண்ணாரப்பேட்டை, கல்மண்டபம் சாலையில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தி.மு.க.,வை கடுமையாக விமர்சித்ததோடு, தனது அரசியல் பயணத்தைப் பற்றியும் உணர்ச்சிபூர்வமாக பகிர்ந்து கொண்டார்.
பழனிசாமி கூறியதாவது: “எங்களை ஆளாக்கியவர்கள் எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா தான். அவர்களது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியதில் என்ன தவறு இருக்கிறது? அ.தி.மு.க.,வில் பதவி, பொறுப்பு கிடைத்ததால் நான் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினேன். அது தவறில்லை. ஆசீர்வாதம் வாங்குவது தமிழர்களின் பண்பு.
உதயநிதி, உங்களுக்கு தாத்தா கருணாநிதி, அப்பா ஸ்டாலின் முதல்வராக இருந்தவர்கள். உங்களுக்கு வசதியும் வாய்ப்பும் இருக்கிறது. நாங்கள் கட்சியில் அடிமட்டத்தில் இருந்து படிப்படியாக உழைத்து, முன்னேறி பெரிய பதவிக்கு வந்துள்ளோம். அந்த வலி எனக்கு தெரியும். 51 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்திருக்கிறேன். கட்சி அறிவித்த போராட்டங்களில் பங்கேற்று 7 முறை சிறை சென்றிருக்கிறேன்.
இதையும் படிங்க: சரிந்தது ஆ.ராசா ராஜ்ஜியம்! ஓரங்கட்டும் திமுக!! ஒதுக்கி வைக்கும் வேட்பாளர்கள்!! ஆடியோ ரிலீசானதால் அவஸ்தை!
நாங்கள் மக்களுக்காக போராடி சிறை சென்றோம். நீங்கள் ஊழல் செய்து சிறை சென்றீர்கள். தி.மு.க.,வினர் இப்போது ‘அமித்ஷா தி.மு.க.,வாகி விட்டது’ என பேசுகின்றனர். நாட்டின் உள்துறை அமைச்சரை சந்திப்பது தவறா? ஏன் அலறுகிறீர்கள்? ஏனென்றால் தி.மு.க.,வினர் அதிக ஊழல் செய்துள்ளனர். மக்களின் செல்வாக்கை இழந்துவிட்டதால் தான் பதறுகிறார்கள்.
இந்தத் தேர்தலில் தோல்வி ஜூரம் தி.மு.க.,வை ஒட்டிக்கொண்டுள்ளது. சென்னை மேயர் பொம்மையாக இருக்கிறார். தகுதியான, திறமையான மேயர் இல்லை. அவர்களைப் பயன்படுத்தி தி.மு.க.,வினர் கொள்ளையடித்து வருகின்றனர். கழிப்பறையை கூட விட்டுவைக்காமல் ஊழல் செய்கிறார்கள்” என்று தாக்குதல் தொடுத்தார்.
எடப்பாடி பழனிசாமியின் இந்தப் பேச்சு, ராயபுரம் பகுதியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அ.தி.மு.க.,வினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. தி.மு.க., அரசின் ஊழல் மற்றும் குடும்ப அரசியலை சுட்டிக்காட்டிய அவரது பேச்சு, தேர்தல் பிரசாரத்தில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், இரு கட்சிகளுக்கும் இடையிலான கடுமையான வார்த்தைப் போர் தொடர்ந்து வருகிறது. எடப்பாடி பழனிசாமியின் இந்த உணர்ச்சிகரமான பிரசாரம், அ.தி.மு.க.,வுக்கு புதிய உத்வேகத்தை அளிப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: விடியல் அமைச்சர்களின் இருண்ட பக்கங்கள்!! திமுக பைல்ஸ் தொடர்ச்சி!! பாஜக புதிய உத்தி!