எங்கள் வரலாற்றை மறைப்பதற்கு நீ யார்? திமுக எம்.பி திருச்சி சிவா காட்டம்!!
கீழடி ஆய்வறிக்கையை அங்கீகரிக்காவிட்டால் நாடாளுமன்றத்தை நடக்க விட மாட்டோம் என திமுக எம்.பி திருச்சி சிவா ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடத்தப்பட்ட கீழடி அகழ்வாராய்ச்சி முடிவுகளை அவற்றின் அறிவியல் சான்றுகளின் அடிப்படையில் அறிக்கையாக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது இரண்டு ஆண்டுகள் ஆகியும் அதனை மத்திய அரசு ஏற்கவில்லை. இதுக்குறித்து பேசிய மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், கீழடி அகழ்வாராய்ச்சி முடிவுகள் அறிவியல்பூர்வமாக, தொழில்நுட்ப ரீதியில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. அங்கீகாரம் வழங்குவதற்கு முன், அதிக நடைமுறைகள் உள்ளன. அதற்கு இன்னும் நிறைய சான்றுகள் தேவைப்படுகின்றன. அவ்வாறு, அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதும் அங்கீகாரம் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். எப்படியாவது எதைச் சொல்லியாவது கீழடி அகழாய்வைப் புறந்தள்ளிவிட வேண்டும் என்ற நோக்கில் பாஜக அரசு செயல்படுவதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த நிலையில் கீழடி தொல்லியல் ஆய்வறிக்கையை ஏற்க மறுத்த மத்திய அரசுக்கு எதிராக மதுரையில், இன்று திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்.பி திருச்சி சிவா கலந்துக்கொண்டு பேசினார். அப்போது, ஹரப்பா கலாச்சாரம் தான் இந்தியாவின் மூத்த கலாச்சாரம் என்று சொல்லப்பட்டது. அந்த அகழ்வாராய்ச்சியின் முடிவு சிந்துவெளி நாகரிகம் கிறிஸ்துவுக்கு 300 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று தெரிவித்தது. ஆனால், கீழடி ஆராய்ச்சி முடிவுகள் தமிழர்களின் நாகரிகம் கிறிஸ்துவுக்கு 600 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை நிரூபித்திருக்கிறது. ஆனால், அதனை இன்னும் அறிவியல் ரீதியாக நிரூபிக்க வேண்டும் என்று மத்திய அரசு ஏற்க மறுக்கிறது. வடக்கே இருப்பவர்கள் சொல்வதெல்லாம் நம்பிக்கையின் அடிப்படையில். தெற்கே இருப்பவர்கள் சொல்வதெல்லாம் ஆதாரங்களின் அடிப்படையில். அப்படி இருக்கும்போது ஏன் கீழடி அறிக்கையை ஏற்க மறுக்கிறீர்கள்? சிந்துவெளி நாகரிகத்தை சரஸ்வதி நாகரிகம் என்று பெயர் மாற்றம் செய்ய முயற்சிக்கிறார்கள். அதற்காக 2000 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறார்கள். சரஸ்வதி என்பது ஒரு நதியின் பெயர்.
இதையும் படிங்க: கனிம சோதனைக்கான ஆய்வகம் தேவை... முதலமைச்சர் ஸ்டாலினிடம் திருமாவளவன் கோரிக்கை!!
அது இருந்ததற்கான சுவடு கிடையாது. புராணங்களில் மட்டுமே சொல்லப்படுகிற சரஸ்வதி நாகரிகத்தை புதுப்பிக்க நினைக்கிறார்கள். இந்தியாவில் உள்ள ஆய்வகங்கள் மட்டுமல்ல, வெளிநாடுகளில் உள்ள ஆயவகங்களும் கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களை ஆய்வு செய்து நிறுவியுள்ளது. ஆதாரங்களின் அடிப்படையில் கீழடி நாகரிகத்தை ஒன்றிய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். சேது பால திட்டம் செயல்பாட்டுக்கு வந்திருந்தால் இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்திருக்கும். உலகின் மூத்த மொழிகளில் முதன்மையான மொழி தமிழ் மொழி. கீழடி அகழாய்வை அமர்நாத் ராமகிருஷ்ணன் 2015ல் தொடங்கினார். 3 ஆண்டு நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் ஆய்வுக்கு அனுப்பி அறிக்கை அளிக்கப்பட்டது.
திடீரென அமர்நாத் ராமகிருஷ்ணனை மத்திய அரசு பணியிட மாற்றம் செய்துள்ளது. தமிழ்நாட்டின் மீது ஒன்றிய பாஜக அரசு பண்பாட்டு படையெடுப்பை நடத்துகிறது.மத்திய அரசு நம் மீது தொடுப்பது பண்பாட்டுப் போர், கருத்தியல் போர், கலாச்சாரப் போர். நாடாளுமன்றம் விரைவில் தொடங்க இருக்கிறது. இந்த விவகாரத்தை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். இந்த முறை நாடாளுமன்ற கூட்டத்தில் நாங்கள் முதலில் எடுக்கப்போவது கீழடி பிரச்சனையை தான். கீழடி ஆய்வறிக்கையை அங்கீகரிக்காவிட்டால் நாடாளுமன்றத்தை நடக்க விட மாட்டோம். பாஜக அரசை ஸ்தம்பிக்க செய்வோம். திமுக மட்டுமல்ல எதிர்க்கட்சிகளையும் கிளர்ந்து எழச்செய்வோம். நீ யார் எங்களின் வரலாற்றை மறைப்பதற்கு? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!