அரசியல் தலைவர்களுக்கு குடும்ப ஒழுக்கம் முக்கியம்!! தவெக தலைவர் விஜயை சாடும் வைகோ!
அரசியல் தலைவர்களுக்கு குடும்பம், ஒழுக்கம் முக்கியம், என, மதுரையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயை ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ சாடினார்.
மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யை மறைமுகமாக கடுமையாக சாடினார். "அரசியல் தலைவர்களுக்கு குடும்பம், ஒழுக்கம் மிக முக்கியம்" என்று வலியுறுத்திய அவர், "எப்படியும் வாழ்க்கை நடத்துவேன், யாரோடும் கைபிடித்து செல்வேன் என்று சொல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
மத்திய அரசு மற்றும் காஸ் தட்டுப்பாட்டை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் மதுரையில் நேற்று நடந்த போராட்டத்தில் பங்கேற்று வைகோ பேசியதாவது: "காஸ் தட்டுப்பாட்டால் வீட்டு குடும்பத் தலைவிகள் முதல் சிறு ஓட்டல்கள் வரை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
வீடுகளில் இனி அடுப்பு எரியுமா என்ற கவலை பல குடும்பங்களில் உருவாகியுள்ளது. ஒரு இட்லி, ஒரு மெது வடைக்கு ரூ.33.33 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டியைத் தாண்டி கூடுதலாக ரூ.9.52 காஸ் கட்டண உயர்வாக வசூலிக்கும் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது."
இதையும் படிங்க: தனிமரமான சசிகலா! தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டி! சறுக்குவாரா? சாதிப்பாரா? கள நிலவரம் ஒரு அலசல்!
மேலும், உலக அரசியல், போர் சூழல் காரணமாக வளைகுடா, அரபு நாடுகளில் வேலை செய்யும் லட்சக்கணக்கான இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து குடும்பங்கள் அச்சத்தில் உள்ளதாகவும், போருக்கு முக்கிய காரணம் அமெரிக்க அதிபர் டிரம்ப் என்றும் குற்றம்சாட்டினார்.
"அமெரிக்காவில் கூட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் குடும்ப வாழ்க்கை, ஒழுக்கத்தை தகுதியாக முன்வைக்கின்றனர். ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளாக ஒழுக்கத்தை கடைபிடிக்கும் நம் சமூகத்தில், அரசியலுக்கு புதிதாக வந்தவர் 'எப்படியும் வாழ்க்கை நடத்துவேன், யாரோடும் கைபிடித்து செல்வேன்' என்று சொல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது" என்று வைகோ கூறினார்.
"தலைவர்களுக்கு குடும்பம், ஒழுக்கம் மிக முக்கியம். மாயாஜால காட்சிகளுக்கு உங்கள் வீட்டு பிள்ளைகளை பலியாக்கி விட வேண்டாம்" என்று எச்சரித்த அவர், இந்தியாவின் தன்மானத்தை அடகு வைத்துவிட்டதாக பிரதமர் மோடியையும் விமர்சித்தார். "இந்தியா கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா அனுமதி பெற வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தியது 120 கோடி மக்களின் தன்மானத்தை அவமதித்தது" என்றும் கூறினார்.
வைகோவின் இந்த கருத்துகள் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. தேர்தல் நெருங்கும் நிலையில், விஜய் அரசியல் பிரவேசத்திற்கு எதிரான விமர்சனங்கள் தீவிரமடைந்து வருகின்றன. குடும்ப ஒழுக்கம், அரசியல் தலைமை ஆகியவை தொடர்பான விவாதம் தமிழகத்தில் சூடுபிடித்துள்ளது.
இதையும் படிங்க: ஒன்றில் தனிச்சின்னம்!! மற்றதில் உதயசூரியன்! மதிமுக ஆலோசனை கூட்டத்தில் வைகோ முடிவு?!