கோவில்பட்டி தொகுதிக்கு குறி! தனிச்சின்னத்தில் போட்டி! சட்டசபையை எதிர்ந்நோக்கி காத்திருக்கும் வைகோ!
தி.மு.க., சார்பில் ராஜ்யசபா எம்.பி., பதவி எதிர்பார்த்து கிடைக்காததால், சட்டசபை தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ராஜ்யசபா எம்.பி. பதவி கிடைக்காத அதிருப்தியால் கோவில்பட்டி தொகுதியில் தனி சின்னத்தில் போட்டியிட ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்ட 4 தொகுதிகளில் ஒன்றில் தனி சின்னத்தில் வைகோ போட்டியிட வேண்டும் என கட்சி நிர்வாகிகளும், நாயுடு சமூகத்தினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் தனி சின்னத்திலும் போட்டியிட ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. கோவில்பட்டி தொகுதியை தனி சின்னத்தில் வைகோ கைப்பற்ற வேண்டும் என்பதே கட்சியினரின் விருப்பம்.
ம.தி.மு.க. நிர்வாகிகள் கூறுகையில், “தி.மு.க. தேர்தல் செலவு ஏற்கிறது. கூட்டணியில் எங்களுக்கு அதிருப்தி இல்லை. ஆனால் வைகோ அவர்களின் குரல் சட்டசபையிலும் ஒலிக்க வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு” என்றனர்.
இதையும் படிங்க: வேட்பாளர் தேர்வில் களம் இறங்கும் ராகுல்காந்தி! 28 சீட்டு யாருக்கு? கலக்கத்தில் காங்கிரசார்!
வைகோ மூன்று முறை ராஜ்யசபா எம்.பி.யாகவும், இரு முறை லோக்சபா எம்.பி.யாகவும் பதவி வகித்தவர். 1996இல் விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த பிறகு சட்டசபை தேர்தலில் நேரடியாக களமிறங்கவில்லை. 2021 தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட முடிவு செய்திருந்தாலும் கடைசி நேரத்தில் விலகினார். தற்போது ராஜ்யசபா எம்.பி. பதவியை எதிர்பார்த்திருந்த நிலையில் அது கிடைக்காததால் சட்டசபைக்கு வரும் முடிவுக்கு வந்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கோவில்பட்டி தொகுதியில் நாயுடு சமூகத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள் உட்பட பலரும் வைகோ போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்த தொகுதியில் நாயுடு சமூக வாக்குகள் முக்கிய பங்கு வகிப்பதால், வைகோ போட்டியிட்டால் கூட்டணிக்கு பெரும் பலம் கிடைக்கும் என கட்சியினர் நம்புகின்றனர். தி.மு.க. தலைமை இறுதி முடிவை எடுக்கும் வரை இந்த விவகாரம் கட்சி வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
வைகோ சட்டசபைக்கு வருவாரா? அல்லது கூட்டணி ஒப்பந்தத்தின்படி வேறு தொகுதியில் போட்டியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு தற்போது தமிழக அரசியலில் எழுந்துள்ளது. கோவில்பட்டி தொகுதி அடுத்த சில வாரங்களில் பரபரப்பு அரங்கமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஸ்டாலின் பார்முலா! இதுவரை 36 தொகுதிகள் கூட்டணிக்கு ஒதுக்கீடு! பின்னணியில் காத்திருக்கும் தரமான ஸ்கெட்ச்!