×
 

இனி விசிக இல்லாமல் தமிழக அரசியல் கிடையாது... என்னை ஒதுக்கியே வச்சாலும்... எரிமலையாய் வெடித்த திருமா...!

தமிழ்நாடு அரசியலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இல்லாமல் அரசியல் இருக்க முடியாது. சிதம்பரத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் பேச்சு 

சிதம்பரத்தில் இன்று நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி பேசியதாவது: இந்த தேர்தல் நாம் எதிர்பாராத முடிவு என்பதை விட, எதிர்பார்த்த முடிவுதான். இவ்வளவு பெரிய தலைகீழ் மாற்றம் உருவாகும் என நாம் எதிர்பார்க்கவில்லை.காட்டுமன்னார்கோவில் தொகுதியில் நான் போட்டியிட வேண்டும். தமிழக அரசியலில் ஈடுபட வேண்டும் என நான் சிந்தித்து செயல்பட்டதற்கான காரணம் என்ன என்பதை இப்போது உணர்ந்து இருப்பீர்கள்.

தமிழ்நாட்டு தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக உள்ளது என்பதை நான் ஏற்கெனவே சொல்லி இருக்கிறேன். தேர்தலுக்கு முன்பே சொன்னேன். ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கிற சக்தியாக வி.சி.க இருக்கும் என்று. தமிழகத்திலே தேர்தலுக்குப் பிறகு அரசியல் சூழல் மாறும். கூட்டணி சேர்க்கை மாறும் என நான் கூறியிருந்தேன். அந்த நேரத்திலே நான் சட்டமன்றத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் நான் போட்டியிடுவதாக அறிவித்தேன்.

இதையெல்லாம் நான் தேர்தலுக்கு முன்பே யூகம் செய்தேன். தமிழ்நாடு அரசியலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இல்லாமல் அரசியல் இருக்க முடியாது. இதுவரை நாம் தனித்து போட்டியிட்டு  நமது வாக்கு வங்கி எவ்வளவு என்பதை இதுவரை நாம் நிருபிக்கவில்லை.  

இதையும் படிங்க: சமூகநீதி வேணாம்! பெரிய துறை தாங்க! அமைச்சரவையில் வேறு துறை கேட்டு அடம் பிடிக்கும் திருமாவளவன்!

மக்களின் பேராதரவோடு அனைத்து தரப்பு மக்களின் ஆதரவோடு ஜனநாயக சக்திகளின் வாழ்த்துக்களோடு வளர்ந்துள்ளோம். நமது வாக்கு சதவீதம் எவ்வளவு என்பதை தனித்துப் போட்டியிட்டு உறுதிப்படுத்தவில்லை. ஆனால் நாம் தவிர்க்க முடியாத சக்தி.

பாட்டாளி மக்கள் கட்சி தங்களுக்கு எவ்வளவு வாக்கு வங்கி இருக்கிறது என்பதை நிரூபித்த பிறகுதான் கூட்டணி சேர முடடிந்தது. மதிமுக, தேமுதிக போன்றவை வாக்கு வங்கியை நிருபித்த பின்னரே கூட்டணி சேர்ந்தது. நாம் தமிழர் கட்சி கூட்டணி சேரவில்லை என்றாலும் கூட அவர்களுடைய வாக்கு வங்கியை உறுதி செய்துள்ளார்கள். 

தமிழகத்திலேயே வாக்கு வங்கி எவ்வளவு உள்ளது என்பதை நிரூபிக்காமல் தொடர்ந்து கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஒரே கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மட்டும்தான். ஆனால் யாரும் இதை பேச மாட்டார்கள். எந்த தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்டு எங்களுக்கு இவ்வளவு வாக்கு வங்கி இருக்கிறது. எங்கள் கூட்டணி வேண்டுமானால் எங்களுக்கு இத்தனை சீட்டு கொடுங்கள். இந்த பதவியை கொடுங்கள் என்று யாரிடமும் பேரம் பேசவில்லை.
ஆனால் தமிழகத்தில் திமுகவிற்கோ, அதிமுகவிற்கோ ஏன் இன்றைய த.வெ.கவிற்கு கூட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கட்டாயம் தேவைப்படுகிறது.

இதை எப்படி நாம் சாத்தியமாக்கி இருக்கிறோம் என்பதுதான் இங்கு பலருக்கு கண்ணை உறுத்துகிறது. ஆகவேதான் விடுதலைச் சிறுத்தைகள், முன்பு போல் இல்லை. ஏதோ பலவீனப்பட்டது போல ஒரு தோற்றத்தை உருவாக்க பார்க்கிறார்கள். 11 சதவீத வாக்கு வைத்திருந்த பா.ஐ.க 2.5 சதவீதத்திற்கு போய்விட்டது. 8சதவீதம் வைத்திருந்த நாம் தமிழர் கட்சி 4 சதவீதம் ஆகி விட்டது. 66 இடங்களில் வெற்றி பெற்ற அதிமுக 47 இடங்களுக்கு வந்து விட்டது. ஆளுங்கட்சியாக இருந்த திமுக 59 தொகுதிக்கு சுருங்கிப் போய்விட்டது.

இதையெல்லாம் விமர்சிக்காதவர்கள்  விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிட்ட 8 இடங்களில் 2 இடங்களில்தான் வெற்றி பெற்றும் கூட ஏதோ விசிக பலவீனம் ஆகிவிட்டது என்று சமூக ஊடகங்களில் நமக்கு எதிரான அவதூறுகளை கட்டமைக்கிறார்கள்.
ஏனென்றால் திருமாவளவனை, விடுதலைச் சிறுத்தைகளை தமிழ்நாடு ஒரு சக்தியாக அங்கீகரித்து விட்டது. தனித்துப் போட்டியிடாமலேயே அங்கீகாரம் பெற்ற கட்சியாக வளர்ந்து விட்டது. தனித்துப் போட்டியிடாமலேயே தவிர்க்க முடியாத சக்தியாக நிற்கிறது.  சீட்டுதானே,
2 சீட்டுதானே என ஏளனம் போசியவர்களுக்கு 24 மணி நேரத்தில் அந்த 2 சீட்டுகளின் வலிமை என்ன என்பதை உணர்ந்திருப்பார்கள்.

அந்த இரண்டும் இல்லாவிட்டால் ஆட்சியே இல்லை என்கிற சூழலை மக்கள் உருவாக்கி இருந்தார்கள். யாரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது என்று நான் அப்போதே கூறினேன். 108 இடங்களிலே வெற்றி பெற்றிருந்தாலும் சிறுத்தைகளின் 2 இடங்கள் இருந்தால்தான் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை தமிழக அரசியலில் வந்தது என்றால் அந்த வாய்ப்பை தமிழ்நாட்டு மக்கள் நமக்கு வழங்கி இருக்கிறார்கள்.

என் தாய்மடி என்று நான் சொல்கின்ற காட்டுமன்னார்கோவில் தொகுதி இந்த அலையிலும் 33 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளோம். நான் டெல்லிக்கு போய் இறங்கினாலும் அங்கே என்னை  பார்க்கக்கூடிய இந்தி பேசுபவர்கள் கூட என்னை கிங் மேக்கர் என அழைக்கிறார்கள். அவர்கள் யார் என்று தெரியாது. ஆனால் அவர்கள் என்னை ஆட்சியாளர்களை உருவாக்க கூடியவர் என அழைக்கிறார்கள். தான் அரசனாக விட்டாலும், பிறரை அரசனாக்கும் வலிமை வெற்றி கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

என்னை ஓரங்கட்ட பார்த்தாலும், ஒதுக்கி வைத்தாலும் நாங்கள் இருக்கும் இடமே வெல்லும். நீங்க 4 சீட்டு கொடுக்கலாம், ஓரம் கட்டலாம். 6 சீட்டு கொடுக்கலாம் ஓரம் கட்டலாம். 2 சீட்டு மட்டும்தான் ஜெயிக்க வைக்கலாம். ஓரங்கட்டலாம். ஆனால் சிறுத்தைகள்தான் மையமாக இருந்தார்கள். இதெல்லாம் நான் குறி சொல்வது போல் சொல்லி வருகிறேன்.

ஒரு தம்பி கூட சொன்னார் நீங்க எங்கேயாவது வேப்ப மரத்தின் கீழே உட்கார்ந்து குறி சொன்னால் அது பலிக்கும் என்று. நான் அரசியலுக்கு வந்து லாப நஷ்ட கணக்கு பார்க்கவில்லை. மக்களுக்காக தொண்டு ஆற்றுகிறோம் அவ்வளவுதான் என பேசினார்.

இதையும் படிங்க: காங்கிரஸ் என்றும் போராடும்... திருமாவளவனுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share