புதிய கூட்டணி அமைச்சரவையில் இணைய விசிக முடிவு - தொல்.திருமாவளவன் அறிவிப்பு!
ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற விசிக-வின் நீண்டகாலக் கனவை நனவாக்க அமைச்சரவையில் இணையப்போவதாக தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ஆட்சியில் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற தங்களது தார்மீக முழக்கத்தின்படி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) நீண்டகால அரசியல் கனவை நனவாக்கும் வகையில், தமிழ்நாட்டின் புதிய கூட்டணி அமைச்சரவையில் நேரடியாகப் பங்கேற்றுத் தங்களது கட்சி இடம் பெறப்போவதாக விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அவர்கள் இன்று பிரகடனம் செய்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தங்களது கட்சியின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அரசியல் நகர்வு குறித்து அக்குவேறு ஆணிவேறாகத் தெளிவுபடுத்தினார். அவர் பேசுகையில், "தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றிலேயே முதன்முறையாகக் கூட்டணி ஆட்சிமுறை (Coalition Government) என்பது தற்போது முறைப்படி அறிமுகமாகிறது. தேர்தலின் போது மக்கள் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் இந்த கூட்டாட்சித் தத்துவம் மலர்ந்துள்ளது. தமிழ்நாட்டு அரசியல் களத்தில், 'ஆட்சியில் பங்கு, அதிகாரத்திலும் பங்கு' என்ற அதிகாரப் பகிர்வு முழக்கத்தை முதன்முதலில் மிக ஆணித்தரமாக எழுப்பிய இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதான் என்பதை இந்த நேரத்தில் பெருமையுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.
மேலும், அமைச்சரவையில் இணைவது குறித்த கட்சியின் உள்விவகார முடிவுகள் குறித்துப் பேசிய அவர், "புதிய தவெக அரசின் அமைச்சரவை விரிவாக்க விழாவில் விசிக நேரடியாகப் பங்கேற்று இடம் பெற வேண்டும் என்பதுதான் எங்களது கட்சியின் பெரும்பாலான மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அடிமட்டத் தொண்டர்களின் ஒருமித்த கருத்தாக இருந்தது. கட்சியின் முன்னணிப் பொறுப்பாளர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் விசிக அமைச்சரவையில் இடம் பெற்று மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற தங்களது விருப்பத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள். அவர்களின் விருப்பத்திற்கும், கட்சியின் கொள்கைக்கும் மதிப்பளித்து, விசிக-வின் நீண்டகாலப் பெரும் கனவை நிறைவேற்றும் வகையில் இந்த புதிய அமைச்சரவையில் அதிகாரப்பூர்வமாக இடம்பெற நாங்கள் தற்போது முழுமையாக முடிவு செய்துள்ளோம்" என்று அறிவித்தார்.
இதையும் படிங்க: ஆளுநர் மாளிகை நடைமுறை அதுதான்!": தமிழ்த்தாய் வாழ்த்துச் சர்ச்சை குறித்து அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்!
முதலமைச்சர் விஜய் மற்றும் தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் விசிக அமைச்சரவையில் பங்கேற்க வேண்டும் என்று விடுத்த நேரடி அழைப்பை ஏற்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இந்த அசுர முடிவை எடுத்துள்ளது. 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி அமைச்சரவையில் இணைந்ததைத் தொடர்ந்து, தற்போது விசிக-வும் ஆட்சியில் பங்கேற்க முடிவு செய்திருப்பது, கோட்டை வட்டாரத்திலும் தமிழக அரசியல் வரலாற்றிலும் ஒரு மிகப்பெரிய புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைத்துள்ளது.
இதையும் படிங்க: 10-ஆம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் நாளை முதல் விநியோகம்.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!