மகளிர் இட ஒதுக்கீடு மசோதா!! எதிர்ப்பா? ஆதரவா? விஜய் பேச்சை குழப்பிய தவெக நிர்வாகி!
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை வரவேற்பதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய், மத்திய அரசு கொண்டு வந்துள்ள மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை வரவேற்றுள்ளார். அதே நேரத்தில், லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை 543-ல் இருந்து 850 ஆக உயர்த்தும் அரசியலமைப்பு 131-வது திருத்த மசோதாவை கடுமையாக எதிர்த்துள்ளார்.
விஜய் வெளியிட்ட அறிக்கையில், “மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை தவெக வரவேற்கிறது. ஆனால், லோக்சபா எம்.பி.க்களின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்தும் மசோதா தென் மாநிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்” என்று தெரிவித்தார்.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், வட மாநிலங்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும். தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும். மொழி, கலாசாரம், மாநில உரிமைகள் சார்ந்த சட்டங்கள் இயற்றுதல் மற்றும் கொள்கைகள் வகுப்பதில் தென் மாநிலங்களின் குரல் பலவீனமடையும். குறிப்பாக தமிழக மக்களின் குரல் லோக்சபாவில் ஒலிக்காமல் போகும் அபாயம் உள்ளது.
இதையும் படிங்க: எடப்பாடிக்கு சோஃபா!! தினகரனுக்கு மட்டும் பிளாஸ்டிக் சேரா? கூட்டணிக்குள் குண்டு வைக்கும் திமுக!!
தமிழகம் மத்திய அரசின் அறிவிப்புகளை கடைபிடித்து வரும் நிலையில், இந்த மசோதா தமிழகத்துக்கு தண்டனையும், மக்கள் தொகை அதிகரித்த மாநிலங்களுக்கு வெகுமதியும் கொடுப்பது போல் அமையும் என்று விஜய் சுட்டிக்காட்டினார்.
தொகுதி மறுவரையறைக்குப் பின், மக்கள் தொகை அடிப்படையிலான நிதி ஒதுக்கீடும் தமிழகத்துக்கு மேலும் குறையும் என்ற அச்சம் எழுந்துள்ளது. ஏற்கனவே நிதி பகிர்வில் தமிழகம் இழப்பை சந்தித்து வருவதாக மாநில அரசு கூறி வரும் நிலையில், இந்த மசோதா பாதிப்பை அதிகரிக்கும்.
எனவே, தமிழகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் 131-வது அரசியலமைப்பு திருத்த மசோதாவை நிறைவேற்றும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று விஜய் வலியுறுத்தினார்.
இதனிடையே, தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலர் அருண்ராஜ் திருச்செங்கோட்டில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அனைத்து மாநில முதல்வர்களையும் கலந்து பேசிய பின்னரே இந்த மசோதாவை செயல்படுத்த வேண்டும். பாஜக கூட்டணியில் இருக்கும் அதிமுக இதை ஆதரிக்கிறதா அல்லது எதிர்க்கிறதா என தெளிவுபடுத்த வேண்டும்” என்றார்.
மேலும், “விஜய் முதல்வராக பதவியேற்ற பின்னர் அவரது தலைமையில் இந்த மசோதாவுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும்” என்றும் அருண்ராஜ் தெரிவித்தார்.
தவெகவின் இந்த நிலைப்பாடு தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மகளிர் இட ஒதுக்கீட்டை வரவேற்கும் அதே வேளையில், தென் மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் தவெக தீவிரமாக குரல் கொடுத்து வருகிறது.
இதையும் படிங்க: உங்க தலைவர் கருப்பு கொடியேற்றினால் என்ன..? நீலக்கொடி ஏற்றினால் என்ன..? மக்களவை சபாநாயகர் கிண்டல்..!!